மத்திய அரசு டாக்டர்கள் ஓய்வு வயது 65-ஆக உயர்வு.. அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: மத்திய அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65ஆக உயர்கிறது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதன்படி, மத்திய அரசின் சுகாதார பணியில் கல்வி கற்பிக்காத டாக்டர்கள், பொது சுகாதார நிபுணர்கள் ஆகியோர் ஓய்வுபெறும் வயது தற்போதுள்ள 62 என்பதிலிருந்து 65ஆக உயர்கிறது. இதேபோன்று ஜி.டி.எம்.ஓ. என்னும் பொதுப்பணி மருத்துவர்களின் ஓய்வு வயதும் 65 ஆக உயர்த்தப்படுகிறது.
நோயாளிகளை சிறப்பான விதத்தில் கவனிக்கவும், மருத்துவ கல்லூரிகளில் கற்பித்தல் செயல்பாடுகள் சரியானவிதத்தில் நடக்கவும் இந்த முடிவு உதவியாக அமையும். அதேபோன்று சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் விதத்தில் தேசிய சுகாதார திட்டங்களை வலுவாக அமல்படுத்தவும் இது உதவும்.
நோயாளிகளை தொடர்ந்து கவனிப்பதை உறுதி செய்யும் வகையில், காலி பணியிடங்களில் மருத்துவர்கள் விரைவாக நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அமைச்சரவை தெரிவித்துள்ளது.