அனுபமாவுக்கு "கசப்பான" அனுபவத்தைக் கொடுத்த கேட்பரீ.. ரூ. 50,000 அபராதம்!
கசப்பு சுவை கொண்ட டைரிமில்க் சாக்லேட்டை விற்பனை செய்தமைக்கு கேட்பரீ நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
குண்டூர்: பாக்டீரியா பாதித்த சாக்லேட்டுகளை விற்பனை செய்ததாக கேட்பரீ நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பிரோடிபேட்டையைச் சேர்ந்தவர் அனுபமா. இவர் கடந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி அங்குள்ள கடையில் 2 கேட்பரீ டைரி மில்க் (ரோஸ்ட் ஆல்மென்ட்) சாக்லேட்டுகள் வாங்கினார். அப்போது அதில் ஒன்றை சுவைத்த போது அது கசப்பாக இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மற்றொரு சாக்லேட்டை பிரித்து சுவைத்தார். அப்போது அதும் கசப்புத் தன்மையுடனே இருந்தது. இவற்றை உற்று நோக்கும் போது சாக்லேட்டின் உள்ளே ஏதோ படிந்திருந்தது போன்று இருந்தது. இதை புகைப்படம் எடுத்த அனுபமா கேட்பரீ நிறுவனத்தின் தாய் நிறுவனமான மான்ட்லெஸ் நிறுவனத்துக்கு இமெயிலில் புகார் அனுப்பினார்.
பின்னர் அனுபமாவை தொடர்பு கொண்ட நிறுவன பிரதிநிதி அந்த சாக்லேட்டுகளுக்கு பதிலாக மாற்று சாக்லேட் தந்துவிடுவதாகவும், இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அனுபமாவோ அதை ஏற்க மறுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.
சாக்லேட்டால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு புகார் மனு அளித்தார். பின்னர் நுகர்வோர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட அனுபமாவுக்கு ரூ.50 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் வழக்குக்கான செலவு ரூ.5000-த்தை அனுபமாவுக்கு வழங்குவதோடு கெட்டுபோன இரு சாக்லேட்டுகளின் விலையான ரூ.90-ஐ வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.