எஸ். எம். கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா தற்கொலை?.. நேத்ராவதி ஆற்றில் தேடும் பணி தீவிரம்!
Recommended Video
மங்களூர்: முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா மாயமானதை அடுத்து அவரை ஆற்றில் தேடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா. இவர் கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளராவார். இவர் திங்கள்கிழமை தனது காரில் வணிகம் ரீதியில் மங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது உல்லாலில் உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் தன்னை இறக்கி விடுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து காரை விட்டு இறங்கிய பின்னர் அவர் யாருடனோ போனில் பேசியுள்ளார். பின்னர் மாலை 6.30 மணி வரை அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.
"ஒரு தொழிலதிபராக தோல்வி அடைந்துவிட்டேன்".. காபி டே ஓனர் சித்தார்த்தா எழுதிய கடைசி கடிதம்
போலீஸார் விசாரணை
இதையடுத்து அவர் ஒரு மணி நேரமாகியும் திரும்பாததால் அச்சமடைந்த டிரைவர் அவரை அங்கு சென்று தேடியுள்ளார். ஆனால் சித்தார்த்தா கிடைக்கவில்லை. இதையடுத்து டிரைவர், சித்தார்த்தாவின் குடும்பத்திற்கு தகவல் அளித்தார். புகாரின் பேரில் தக்ஷின கன்னடா போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
சந்தேகம்
அவர் ஆற்றில் விழுந்துவிட்டாரா என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே சித்தார்த்தா ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பங்குகள்
இந்த நிலையில் எஸ் எம் கிருஷ்ணாவை முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது போல் காங்கிரஸ் எம்எல்ஏ டிகே சிவக்குமாரும், எஸ் எம் கிருஷ்ணாவை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். மைன்ட் ட்ரி நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை அண்மையில் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இருவர்
இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில் சக்லேஷ்பூருக்கு செல்வதாக கூறிவிட்டு பெங்களூரிலிருந்து காரில் புறப்பட்டுள்ளார் சித்தார்த்தா. ஆனால் செல்லும் வழியில் மங்களூர் செல்லுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். அவருடன் வந்த இருவர் பம்ப்வெல் சர்க்கிள் என்ற இடத்தில் இறங்கிவிட்டனர்.
தேடும் பணிகள்
பின்னர் நேத்ராவதி ஆற்றுப் பாலம் அருகே காரை நிறுத்துமாறு கூறிய சித்தார்த்தா காரை விட்டு இறங்கி, தான் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என கூறி டிரைவர் காத்திருக்குமாறு கூறியுள்ளார். படகு சேவைகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மூத்த மகள்
நேத்ராவதி ஆற்றின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. அவர் யாருடன் கடைசியாக பேசினார் என்பது குறித்து செல்போன் தகவல்களை ஆராய்ந்து வருகிறோம் என்றனர். எஸ்எம் கிருஷ்ணாவின் மூத்த மகள் மாளவிகாவை திருமணம் செய்து கொண்டுள்ள சித்தார்த்தாவுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
முனைப்பு
சித்தார்த்தா 1990-ஆம் ஆண்டு காபி டே என்ற நிறுவனத்தை பெங்களூரில் பிரிகேட் சாலையில் தொடங்கினார். இவர் இந்தியாவின் காபி அரசர் என அழைக்கப்படுகிறார். கஃபே காபி டே நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வாங்குவதற்காக அந்த நிறுவனத்துடன் கோக கோலா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ரூ 8000 கோடி முதல் ரூ 10000 கோடி வரை பங்குகளை விற்க காபி டே நிறுவனம் முனைப்பு காட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.