எக்ஸ்பிரஸ் ரயில் வெஜ் பிரியாணியில் 'பல்லி'.... பயணிகள் ஷாக்! - சிஏஜி சொன்னது உண்மை தானா?...
ரயில்களில் பரிமாறும் உணவுகள் தரமற்றவை என்று சிஏஜி கூறியுள்ள நிலையில் உத்தரபிரதேச ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது பயணிகளை அச்சமடையச் செய்துள்ளது.
பாட்னா: ஜார்க்கண்டில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவில் பல்லி இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்து, அதனை புகைப்படம் எடுத்து ரயில்வே அமைச்சருக்கு ட்வீட் செய்தனர்.
ரயில்வே துறையால் வழங்கப்பட்டு வரும் கேட்டரிங் சாப்பாடு மனிதர்கள் உட்கொள்வதற்கு ஏற்றதல்ல என்று கடந்த வெள்ளிக்கிழமை கணக்காய்வாளர் தணிக்கை பிரிவான சிஏஜி கூறியிருந்தது.
அசுத்தமான உணவு வகைகள், மறுசுழற்சி உணவுப்பொருட்கள், பழைய உணவுப் பொருட்களை சூடேற்றி விற்கப்படுவதாகவும் சிஏஜி தனது அறிக்கையில் கூறியிருந்தது. கேட்டரிங் சேவைகளின் நிர்வாகத்தின் நிச்சயமற்ற நிலை, ரயில்வேயின் கேட்டரிங் கொள்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதே இதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
ரயில்வேயால் வழங்கப்படும் உணவுகள் மூடப்படுவதில்லை, ரயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சிகள், எலிகள், தூசுகள், நிறைந்துள்ளன. தூய்மை பராமரிக்கப்படுவதில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
வெஜ் பிரியாணியில் 'பல்லி'
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜார்க்கண்டில் இருந்து உத்தரபிரதேசம் செல்லும் அந்த ரயில் பாட்னா அருகே வந்த போது பயணிகளுக்கு வெஜ் பிரியாணி விநியோகிக்கப்பட்டுள்ளது.
பயணி பாதிப்பு
சாப்பாட்டை திறந்தவர்களுக்கு அதிர்ச்சி காரணம் காய்கறி பிரியாணியில் செத்த பல்லி கார்னிஷ் செய்யப்பட்டிருந்தது. இது தெரியாமல் உணவை உண்ட ஒருவர் மயங்கி விழுந்தார், இதனையடுத்து மற்ற பயணிகள் உணவை தூக்கி வீசியெறிந்துள்ளனர். பயணிகள் கேட்டரிங் பணியாளர்களிடம் பல்லி விழுந்த உணவைக் காட்டி கேட்டுள்ளனர், அதற்கு அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை.
ட்விட்டரில் அமைச்சருக்கு போட்டோ
இதனால் அந்த உணவை படம்பிடித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து ரயில் முஹல்சராய் ரயில் நிலையம் வந்தவுடன் மருத்துவக் குழுவினர் அனுப்பப்பட்டு அனைவருக்கும் மருந்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
நடவடிக்கை
இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்தது யார் என்று விசாரணை நடத்தி ரயில்வே அமைச்சரிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முஹல்சராய் ரயில் நிலைய மூத்த அதிகாரி கிஷோர் குமார் கூறியுள்ளார். மேலும் சிஏஜி அறிக்கை கருத்துகளின் அடிப்படையில் மக்களுக்கு சிறந்த சேவையை மேற்கொள்வதற்கான கடுமையான நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.