கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு கடன் வாங்கியதில் விதிமீறல்... நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை
கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு கடன் வாங்கியதில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: ரஷ்ய நாட்டு கூட்டமைப்புடன் தொடங்கப்பட்ட கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு ரூ. 1000 கோடி கடன் வாங்கியதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய அணு மின் குழுமம் சார்பில் ரஷ்ய நாட்டு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டன. தொடக்கத்தில் இரு அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டன.
இதற்காக ஹெச்டிஎப்சி வங்கியிடம் ரூ. 1000 கோடியை மத்திய அரசின் இந்திய அணு மின் குழுமம் கடனாக பெற்றிருந்தது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகள் காலதாமதமாகவே தொடங்கப்பட்டன.
இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பதற்காக ஹெச்டிஎப்சியிடம் பெற்ற ரூ.1000 கோடி கடனில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஏஜி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு வங்கியில் ரூ.1000 கோடி கடன் வாங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட குறைபாடுள்ள பொருட்கள் காரணமாக கூடுதல் செலவீனம் ஏற்பட்டது.
அந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவோ, சரிசெய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1, 2-ஆவது அணு உலைகள் அமைக்க தாமதமானதால் அரசு ரூ.449 கோடி கூடுதல் வட்டி செலுத்த நேரிட்டது.
எதிர்வரும் காலத்தில் மேலும் அணு உலைகள் அமைக்கும் பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டால் கடனை திருப்பி செலுத்துவதில் கால அவகாசம் தேவைப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-ஆவது அணு உலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கின.ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அணுஉலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் 2024ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.