ஆகாஷ் ஏவுகனைகள் நம்மைக் காக்காது.. சிஏஜி போட்ட திடீர் குண்டு!
டெல்லி: இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைத் திட்டம் தோல்வி அடைந்து விட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக இதுவரை ரூ. 3600 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணைகளின் நம்பகத்தன்மையையும் அது கேள்வி கேட்டுள்ளது.
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது ஆகாஷ் ஏவுகணை. ஆனால் இது சமீபத்திய அனைத்து சோதனைகளிலும் தோல்வி அடைந்து விட்டதாக சிஏஜி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
சிஏஜி அறிக்கை குறித்து இதுவரை விமானப்படை தரப்பிலிருந்து பதில் ஏதும் அளிக்கப்படவில்லை. ஆகாஷ் திட்டத்தின் கீழ் ஆகாஷ் மற்றும் ஆகாஷ் எம்கே 2 என இரு ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன.
எதிரி ஏவுகணைகளை தகர்க்கும் ஏவுகணை
ஆகாஷ் ஏவுகணையானது, எதிரி நாட்டு ஏவுகணைகளை வழியிலேயே மறித்துத் தாக்கி அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அது தனது வேலையை சரியாக செய்யவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என சிஏஜி கூறியுள்ளது. தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளில் பெரும்பாலானவை தோல்வி அடைந்து விட்டதாக அது கூறியுள்ளது.
18 டூ 30 கிலோமீட்டர் தொலைவில்
எதிரி ஏவுகணைகளை நமது வான் எல்லையில் 18 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் வைத்தே அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகாஷ் ஏவுகணை. பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்தான் இந்த ஏவுகணையை உருவாக்கியது.
மேக் இன் இந்தியா திட்டத்துக்கு அடி
இந்த நிலையில் இப்படி ஒரு அறிக்கையை சிஏஜி கொடுத்துள்ளது, மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்துக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகமும் இல்லை, விவேகமும் இல்லை
ஆகாஷ் ஏவுகணையின் வேகமும் திட்டமிட்ட அளவில் இல்லை. அது எதிரி ஏவுகணையையும் தாக்க அழிக்க முடியவில்லை என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல முக்கிய பிரிவுகள் சரிவர செயல்படவில்லை என்றும் சிஏஜி கூறியுள்ளது.
வட கிழக்குக்கு டெலிவரி ஆகவில்லை
எஸ் செக்டார் பிரிவில் (வட கிழக்கு) 2013-15ம் ஆண்டு காலகட்டத்தில் ஆகாஷ் ஏவுகனைகளை நிலைநிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இந்த ஏவுகனைகளின் துல்லியம் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லை. இதன் வெற்றி அம்சமும் கேள்விக்குரியதாக உள்ளது.
30% ஏவுகனைகள் தோல்வி
கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 80 ஏவுகனைகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. அதில் 20 ஏவுகனைகள் 2014 ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சோதித்துப் பார்க்கப்பட்டது. அதில் 6 ஏவுகனைகள் அதாவது 30 சதவீத சோதனைகள் தோல்வி அடைந்தன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமானப்படை இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.