2ஜி வழக்கில் சிஏஜி வினோத் ராய் விசாரிக்கப்பட வேண்டும்... ஆ.ராசா
2ஜி வழக்கில் குற்றம்சாட்டிய சிஏஜி வினோத் ராய் விசாரிக்கப்பட வேண்டும் என்று திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
டெல்லி: 2ஜி வழக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது குற்றம்சாட்டிய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) வினோத் ராய் விசாரிக்கப்பட வேண்டும் என்று திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி வினோத் ராய் புகார் கொடுத்தார்.
இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி வெளியானது.
புத்தகம் வெளியீடு
அதில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, சிபிஐ போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் இந்த வழக்கிலிருந்து 14 பேரையும் விடுவிப்பதாக தீர்ப்பளித்தார். இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்தும் 15 மாத சிறை வாசம் குறித்தும் ஆ.ராசா "2 G Saga Unfolds"என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
சிஏஜி வினோத் ராய்
அந்த புத்தகம் நாளை வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆங்கில தொலைகாட்சி சேனலுக்கு ஆ.ராசா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி வினோத் ராய் கூறியதில் மிகப் பெரிய அரசியல் சதி இருந்தது.
துஷ்பிரயோகம்
வினோத் ராய் தனக்கு அளிக்கப்பட்ட அரசியல் சாசன அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டார். வினோத் ராயின் பின்னால் ஒரு அரசியல் கட்சி இருந்ததை என்னால் உறுதியாக கூறமுடியும். இந்த குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் விசாரிக்கப்பட வேண்டும். இவரை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என தெரிய வேண்டும் என்றார் அவர். அப்போது உங்கள் புத்தகத்தில் நம்பர் 1 வில்லன் வினோத் ராய்தானா என்று செய்தியாளர் ராசாவிடம் கேள்வி எழுப்பினார்.
ஐஏஎஸ் அதிகாரி
அதற்கு ஆ.ராசா பதிலளிக்கையில் நான் யாரையும் வில்லனாக கருதவில்லை. உண்மைகளை மட்டுமே கூறியுள்ளேன். நீங்கள் அவரை வில்லன் என்று கூறினால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஐஏஎஸ் அதிகாரியான அவருக்கு அரசியலுக்கு வருவது குறித்த கனவெல்லாம் இருக்காது. ஆனால் அவரை யாரோ பயன்படுத்தினார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
சிஏஜி கேட்கும் கேள்விகளுக்கு...
அவர் ஒரு தலைப்பட்சமாக ஐமுகூ மீது குற்றம் சுமத்தியது ஏன் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். தொலைத் தொடர்பு துறைக்கும் தணிக்கை துறைக்கும் தொடர்பு உள்ளது. சிஏஜி கேட்கும் அனைத்து கேள்விகளுக்கு டெலிகாம் துறையில் உள்ள அதிகாரிகள் உரிய முறையில் பதிலளித்துள்ளனர்.
எந்த பொய்யும் இல்லை
அவர்கள் சிஏஜியிடம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறு நடக்கவில்லை. எந்த முறைகேடும் நடக்க வில்லை, கொள்கை முடிவில் எந்த பித்தலாட்டமும் செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 2ஜி அலைக்கற்றை முறைகேடு குறித்து வினோத் ராயுடன் இதே மேடையில் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அப்போது பார்ப்போம் யார் செய்தது சரி, யார் கூறியது தவறு என்று.
மன்மோகனுக்கு எதுவும் தெரியாது
அனைவரும் 1.76 லட்சம் கோடியை வானியல் எண்ணிக்கை போல் பயன்படுத்தி வருவதை நிறுத்துங்கள். இதை நீதிமன்றமே ஏற்கவில்லை. வினோத் ராய் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அவருடைய சொந்த கருத்துகளே ஆகும். சிஏஜி என்ற துறையின் குற்றச்சாட்டுகள் அல்ல. பிரதமருக்கு மத்திய அரசின் அனைத்து கொள்கைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்க முடியாது. அப்போ எதற்காக துறை அமைச்சர்கள் உள்ளனர்?. மன்மோகனுக்கு எதுவும் தெரியாது என்றார் ஆ.ராசா.