ஆந்திராவை தொடர்ந்து, கர்நாடகாவிலும் வலுக்கிறது பிரிவினை கோஷம்!
பெங்களூரு: கர்நாடகாவை இரு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளன. நீண்ட நாள் கோரிக்கையான இது, ஆந்திர பிரிவினைக்கு பிறகு அதிகமாக ஒலிக்க தொடங்கியுள்ளது.
பெல்காம், குல்பர்கா, ஹுப்ளி உள்ளிட்ட வட கர்நாடகாவின் பல மாவட்ட மக்களுக்கு, பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார், தும்கூர், ஷிமோகா போன்ற தென் கர்நாடக மாவட்டங்கள் எப்போதும் அன்னிய தேசம் போலவே காட்சியளித்து வந்துள்ளன.
பந்த்துக்கு எதிர்ப்பு
மேகதாது அணைக் கட்டு விவகாரத்தில், கர்நாடக பந்த் நடைபெற்றபோது, வட கர்நாடகாவில் மக்கள் பூங்கொத்து கொடுத்து வியாபாரிகளை கடையை திறக்க கேட்டுக்கொண்டதில் இருந்தே அவர்களின் துவேஷத்தை தெரிந்து கொள்ளலாம்.
காவிரிக்கே, கன்னட சங்கங்கள்
வட கர்நாடக மக்கள் நினைக்கும்படிதான், தென் கர்நாடக மக்களும், அரசியல்வாதிகளும், கன்னட சங்கங்களும் நடந்து வருகின்றன. நதி நீர் பிரச்சினைகளில் கூட வட கர்நாடகா தொடர்புள்ள கிருஷ்ணா, மகதாயி விவகாரங்களுக்காக மூச்சுவிடாத கன்னட சங்கங்கள், காவிரி நதி என்றால்தான் முஷ்டி முடக்குகின்றன.
வறண்ட மாநிலம்
பெங்களூரு உள்ளிட்ட தென் கர்நாடக மாவட்டங்கள், தொழில் வளத்தில் மட்டுமின்றி, விவசாய வளத்திலும் முன்னேறியுள்ளன. வட கர்நாடகாவில் தொழிற்சாலைகள் சொற்பமாகவே இருப்பதுபோலவே, விவசாயமும் படு மோசம். ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக வறண்ட பூமி அதிகமுள்ள இடம் கர்நாடகா. அதிலும் பெரும்பாலான இடம் வட கர்நாடகாவில்தான் உள்ளது.
முன்னாள் அமைச்சர்
இந்நிலையில்தான், பெல்காமை தலைநகராக கொண்டு வட கர்நாடகாவை தனியாக பிரிக்க கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போது இக்கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. பாஜக அரசில் தோட்டக்கலைத்துறை அமைச்சராக பதவி வகித்த உமேஷ் கத்தி எம்.எல்.ஏ இதுகுறித்து கூறுகையில், "கர்நாடகாவை நீண்ட காலம் ஆண்ட காங்கிரஸ் அரசுகள், தொடர்ந்து வட கர்நாடகாவை புறக்கணித்து விட்டன. எனவே மாநிலத்தை பிரிப்பது ஒன்றுதான் வட கர்நாடக மக்ககளை முன்னேற்றுவதற்கான ஒரே வழியாக இருக்க முடியும்" என்றார்.
மைசூருக்கு மட்டுமே ஐஐடி
மேலவை பாஜக உறுப்பினர் பிரபாகர் கோரே கூறுகையில், "வட கர்நாடகாவுக்கு எதிரான நிலைப்பாட்டைதான் முதல்வர் சித்தராமையாவும் தொடர்ந்து எடுத்து வருகிறார். மைசூரில் ஐஐடி அமைக்க பரிந்துரை செய்த சித்தராமையாவை, பெல்காமில், அமைக்க பரிந்துரைக்கவிடாமல் தடுத்தது யார்?" என்றார்.
விவசாய சங்கமும் வெறுப்பு
கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் சாமராஜ மாலிபாட்டீல் கூறுகையில், "மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் கிடையாது. ஆனால், கடந்த 60 ஆண்டுகாலத்தில், வட கர்நாடகாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அரசுகள் தவறி விட்டதால், இந்த கோரிக்கை வலுக்கிறது" என்றார்.
சில்லரைதனமானது
இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவிடம் கேட்கையில், "கர்நாடகாவை பிரிக்கும் திட்டம் கிடையாது. அதுபோன்ற கோரிக்கையாளர்கள், சில்லரை தனமான அரசியலில் ஈடுபடுபவர்களாகும்" என்றார்.