ஸ்பெக்ட்ரம் 'ஜேபிசி'..சாக்கோவுடன் தொடர்ந்து மல்லுகட்டும் டி.ஆர். பாலு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை முழுமையாக ஆராயாமல் நாடாளுமன்ற கூட்டுக் குழுவான ஜேபிசி தமது வரைவு அறிக்கையை இறுதி செய்யக் கூடாது என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
ஜேபிசியின் கூட்டம் கடந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் அதை ஜேபிசி தலைவர் சாக்கோ, வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
பாலு கடும் எதிர்ப்பு
இதற்கு டி.ஆர். பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜேபிசி உறுப்பினர்களில் ஒருவரான என்னைக் கேட்காமல் குழுவின் புதிய தேதியை நிர்ணயித்தது தவறு; அக்டோபர் முதல் வாரத்துக்குப் பிறகு வேறு தேதியில் ஜேபிசி கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று சாக்கோவுக்கு டி.ஆர். பாலு கடந்த 13-ந் தேதி கடிதம் அனுப்பி வைத்தார்.
சாக்கோ பிடிவாதம்
ஆனால் பி.சி.சாக்கோ விட்டுக் கொடுக்காமல், உங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட ஆவணங்களை நான் ஆராய்ந்துவிட்டேன். அவற்றின் மூலம் ஜேபிசி விசாரணைக்குப் புதிதாக ஏதும் கிடைத்துவிடாது என்று பதில் கடிதம் அனுப்பி வைத்தார்.
மீண்டும் பாலு கடிதம்
இந் நிலையில் சாக்கோவுக்கு மீண்டும் டி.ஆர். பாலு நேற்று அனுப்பிய கடிதத்தில், ஜேபிசி வரைவு அறிக்கையில் தொலைத் தொடர்புத் துறையால் பிரதமர் தவறாக வழிநடத்தப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் முரண்
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலோ பிரதமரின் அறிவுரை மதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கும் தெரியும்
இதன்படி பிரதமர் அறிவுரை வழங்கும் அளவுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதே பொருள்.
தொடர் முரண்கள்
இதேபோல முதலில் வருவோருக்கு முன்னுரிமை கொள்கைப்படி அலைக்கற்றை ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக ஜேபிசி வரைவு அறிக்கையில் பல முரண்பட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு தெளிவு கிடைக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை ஜேபிசி ஆராய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர், தான் நேரில் ஆஜராக விடுத்த வேண்டுகோளை "நேரமில்லை' எனக் கூறி நீங்கள் நிராகரித்தீர்கள்.
ஆனால், உங்கள் வசதிக்கேற்ப ஜேபிசி பதவிக் காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்தீர்கள். எனவே, அலைக்கற்றை வழக்கு ஆவணங்களை முழுமையாக ஆராயும் வரை, ஜேபிசி வரைவு அறிக்கையை இறுதி செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.