தானே துயரம்: பிணக்குவியலைப் பார்த்து ஹார்ட் அட்டாக்கில் டிவி கேமராமேன் மரணம்
மும்பை: தானே அருகே தனது குடும்பத்தார் 14 பேரைக் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்து விட்டு, இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை படமெடுக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை அடுத்த தானேயில் தனது பெற்றோர், சகோதரிகள், மனைவி மற்றும் குழந்தைகள் என 14 பேரை அஸ்னேன் என்ற இளைஞர் கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பதவி உயர்வு கிடைத்துள்ளதாகக் கூறி, அனைவரையும் விருந்திற்கு அழைத்து இந்தக் கொடூரச் செயலை அவர் அரங்கேற்றியுள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் அஸ்னேன்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்தே கொலைக்கான காரணம் வெளிச்சத்திற்கு வரும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை, அதே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரே கொடூரமாகக் கொலை செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இது குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊடகங்கள், செய்தி சேகரிப்பதற்காக சம்பவம் நடந்த வீட்டில் குவிந்தனர்.
அப்போது கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைப் படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி கேமராமேன் ரதன் பவுமிக் (30) என்பவருக்கு, பிணக்குவியலைக் கண்ட அதிர்ச்சியில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் தானே மாநகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் டிவி கேமராமேன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.