சட்டீஸ்கரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு
Recommended Video
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல்கள் நடைபெறும் தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைந்தது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் 20ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலில் 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். அதில் 10 தொகுதிகள் நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகம் உள்ளவையாகும். அவற்றில் இன்று மதியம் 3 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிற 8 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மாலை 5 மணியுடன் முடிவடைய உத்தரவிடப்பட்டிருந்தது.
எஞ்சிய 72 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 20ம் தேதி தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவு டிசம்பர் 11ம் தேதி தெலுங்கானா, ம.பி., ராஜஸ்தான், மிசோராம் ஆகிய மாநில தேர்தல் முடிவுகளுடன் ஒன்றாக, வெளியாக உள்ளது.
இறுதி நாள் பிரச்சாரத்தையொட்டி, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் சட்டீஸ்கரில் முகாமிட்டுள்ளனர். பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும், இன்று பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் கட்சி, நகர்ப்புற நக்சலைட்டுகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். பதிலடியாக ராகுல் காந்தியோ, பாஜகவால் நக்சலைட்டுகள் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.