மாறன் சகோதரர்களுக்கு சிக்கல்... செப்டம்பர் 11க்குப் பிறகா.. முன்கூட்டியேவா?
டெல்லி: ஏர் செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மாறன் சகோதரர்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் கைது செய்யப்படுவது எப்போது என்ற பேச்சுக்கள் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த வழக்கை செப்டம்பர் 11ம் தேதிக்கு டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் நீதிபதி ஷைனி, இந்த வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது குறித்து தீர்மானிக்கவுள்ளார்.
அதேசமயம், அதற்கு முன்பே கூட மாறன் சகோதரர்களை கைது செய்ய சிபிஐ நடவடிக்கை எடுக்கலாம் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
2004 முதல் 2007 வரை ராகு காலம்!
2004-2007 ஆண்டு காலத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தார். அப்போது வெளிநாட்டு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், சென்னையில் நடத்தி வந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு 2006-ஆம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதற்கு தயாநிதி மாறன் உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஏர்செல் நிறுவனப் பங்குகள் திடீரென மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறின. அதன்பிறகு ஏர்செல் நிறுவனத்துக்கு 14 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்பட்டன.
ரூ. 650 கோடி முதலீடு
இதற்குப் பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் டிவி குழுமத்தின் "சன் டைரக்ட்' நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்தது, இந்த பணம் மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகள் வழியே சன் டைரக்ட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.
தூக்கி போடுங்கப்பா கோப்புகளை
இந்த வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டே சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. ஆனாலும் இத்தனை ஆண்டுகாலம் இந்த வழக்கு கிடப்பிலேயே கிடந்தது. அதனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதன் பின்னர் இந்தியாவில் இருக்கும் ஆதாரங்கள், மலேசிய விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்கள் ஆகியவற்றை வைத்தே வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடிந்து கூறியது குற்றப்பத்திரிகைக்கு கிரீன் சிக்னல் இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட ஏர்செல்-மேக்சிஸ் வழக்கும் சூடு பிடித்தது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியும் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான போதிய ஆதாரம் உள்ளதாக கடந்த ஜூலை மாதம் சி.பி.ஐ.யிடம் தெரிவித்திருந்தார்.
குற்றப்பத்திரிக்கை
இந்த நிலையில் தற்போது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதில் மொத்தம் 9 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தயாநிதி மாறன், அவரது மூத்த சகோதரர் கலாநிதி மாறன், மலேசியத் தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் நிறுவனத்தின் உயரதிகாரியான அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மற்றும் முன்னாள் டெலிகாம் செயலாளர் ஜே.எஸ்.ஷர்மா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஷர்மா உயிரிழந்துவிட்டார். மேலும், மேலும் சன் டைரக்ட் பிரைவேட் லிமிடெட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் பெர்ஹாட், சௌத் ஏசியா என்டேர்டைன்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் மற்றும் ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் பிஎல்சி ஆகிய நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 11ல் விசாரணை
இந்தக் குற்றப்பத்திரிக்கை செப்டம்பர் 11ம் தேதி நீதிபதி ஷைனி முன்பு விசாரணைக்கு வருகிறது. அன்று அவர் விசாரித்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராவது தொடர்பான சம்மன்களைப் பிறப்பிப்பார் என்று தெரிகிறது.
72 பக்கம் 151 சாட்சிகள்
மாறன் சகோதரர்கள் மீதான குற்றப்பத்திரிக்கை 72 பக்கங்கள் கொண்டது. இதில் 151 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 655 ஆவணங்களின் தொகுதிப்பு குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளன.
எத்தனை பிரிவுகளி்ல வழக்கு
ஊழல் தடுப்புச்சட்டம் 120 பி ( கிரிமினல் சதி) பிரிவு-7 ( பொது ஊழியர் அரசு சட்டத்திற்கு விரோதமாக லஞ்சம் பெறுதல்), பிரிவு -12 ( 7ம் பிரிவின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு தண்டனை வழங்குதல்), பிரிவு 139(1) (டி), ( பொது ஊழியரின் கிரிமினல் நடத்தை ) ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முன்பே கைது செய்ய வாய்ப்பு....!
இதற்கிடையே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் சிபிஐ நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய முடியுமாம். அதாவது சாட்சிகளைக் கலைக்க முயற்சித்தார்கள் என்று கூறியோ, சாட்சிகளைக் கலைக்க முயற்சிப்பார்கள் என்று கூறியோ கூட கைது செய்ய முடியுமாம். எனவே மாறன் சகோதரர்கள் கைதாவார்களா என்ற பரபரப்பும் காணப்படுகிறது.
வரலாறு படைக்கும் திஹார்..!
ஒரு வேளை மாறன் சகோதரர்கள் கைது செய்யப்பட்டால், திஹார் சிறையில் அடைக்கப்படலாம். அப்படி அடைக்கப்பட்டால், திமுக குடும்பத்தைச் சேர்ந்த 2வது பேட்ச் உறுப்பினர்கள் என்ற பெயரை இவர்கள் பெறுவார்கள். இதற்கு முன்பு கனிமொழி, ராசா ஆகியோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது நி்னைவிருக்கலாம். இதில் ராசா ஒரு வருடம் உள்ளே இருந்தார்.