கேஜ்ரிவால் இருமலை 7 நாளில் 'யோகா' மூலம் சரி செய்வேன்: மோடி பரிந்துரைத்த பெங்களூர் டாக்டர்!!
பெங்களூர்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இருக்கும் நீடித்த இருமல் பிரச்சனையை 7 நாளில் யோகா மூலம் தம்மால் சரிசெய்துவிட முடியும் என்று பிரதமர் மோடி பரிந்துரைத்த பெங்களூர் டாக்டர் நாகேந்திரா கூறியுள்ளார்.
டெல்லியில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கேஜ்ரிவால் தொடர்ந்து இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த விவேகானந்தா யோகா ஆய்வு மையத்தின் மருத்துவர் நாகேந்திராவிடம் காட்டினால் சரியாகிவிடும் என்று கேஜ்ரிவாலிடம் மோடி கூறியிருந்தார். இது தொடர்பாக பெங்களூர் மருத்துவர் நாகேந்திரா கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி எங்களது இன்ஸ்டிடியூட் மீது நம்பிக்கை வைத்திருப்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அலர்ஜி இருப்பதுதான் முக்கிய பிரச்சனை.
இந்த பிரச்சனைக்காக இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருக்கின்றனர். கேஜ்ரிவாலும் எங்களது நிறுவனத்துக்கு வந்து 7 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும்.
கேஜ்ரிவால் அலோபதி மருந்துகளை தற்போது எடுத்துக் கொண்டிருக்கிறார்.. நாங்கள் யோகா மூலமே சரி செய்துவிடுவோம். பாபா ராம்தேவ், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு இலவசமாக சிகிச்சை தர கேட்டுக் கொண்டிருக்கிறார். அரவிந்த் கேஜ்ரிவால் ஒப்புக் கொண்டால் அவருக்கும் இலவசமாகவே சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு நாகேந்திரா கூறினார்.