தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து மோடியால் கொண்டு வர முடியுமா?
அகமதாபாத்: தாம் நாட்டின் பிரதமரானால் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் நிழல் உலக தாதா தாவூப் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டு வருவேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று முன் தினம் பேட்டியளித்த நரேந்திர மோடி, தாம் நாட்டின் பிரதமரானால் மும்பை தொடர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்குக் கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார்.
மும்பை போலீஸ் கமிஷனர் ஷர்மா பதவி காலத்தில் முன்பு தாவூத்தை ஒழித்துக் கட்ட போலி பாஸ்போர்ட் மூலம் இந்திய அதிகாரிகள் குழுவை கராச்சிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
அதேபோல் தாவூதின் எதிரி சோட்டா ராஜனும் தாவூத்தின் கதையை முடிக்க பகீரத பிரயத்தனம் மேற்கொண்டான். அவனது அடியாட்களாலும் தாவூத்தை போட்டுத் தள்ள முடியவில்லை.
இந்த நிலையில் மோடியின் இந்த சவால் குறித்து கருத்து 1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தாவூத் கைவரிசையை கண்டறிந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.சி. பவார் கூறுகையில், மோடி போன்ற வல்லமைமிக்கவரால் இந்த சவால் சாத்தியமானதே. இது ஒன்றும் கடினமான பணி அல்ல. மோடியைப் பொறுத்தவரை திடமான நம்பிக்கை கொண்டவர். அவரால் இது செய்ய முடியும் என்கிறார்.
குறிப்பாக ஒசாமா பின்லேடனை அமெரிக்கா அழித்த பிறகு, தாவூத் இப்ராகிமின் இருப்பிடம் குறித்த தகவலை படுரகசியமாக வைத்திருக்கிறதாம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.எஸ். முன்பைவிட தாவூத் இப்ராகிமுக்கு பல அடுக்கு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாம். தாவூத்துக்கான இத்தனை பாதுகாப்புகளையும் அவனது சகா சோட்டா ஷகீல்தான் பார்த்துக் கொள்கிறானான்.
இத்தனையையும் மீறி மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளால், கொடுக்கப்படும் நெருக்கடிகளால் தாவூத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவது என்பது சாத்தியமானதே என்கின்றனர் மோடி ஆதரவாளர்கள்.