பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதிக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்
டெல்லி: செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இனி அனுமதி அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தது.
அதன்படி அனைத்து வங்கிகள், தபால் நிலையங்களில் பழைய நோட்டை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
மேலும், வெளிநாடுகளுக்கு சென்ற, வெளிநாடு வாழ் இந்தியர்களும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்தது. இந்த நிலையில் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கால அவகாசத்தை கூடுதலாக நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதுதவிர்த்து டெல்லி, கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து வழங்க வேண்டும் என்று 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு நீதிபதிகள், உண்மையான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான காரணங்களால் பழைய நோட்டுகளை மாற்ற இயலாதவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தது.
இந்நிலையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய நோட்டை டெபாசிட் செய்ய அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. செல்லாத நோட்டை டெபாசிட் செய்ய அனுமதிப்பது பினாமி பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.