"இனி 8ம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி கிடையாது” - மத்திய அரசு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!
டெல்லி: மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் ஒருமனதாக ஆதரவு கிடைத்துள்ளதால் 8 ஆம் வகுப்புவரையில் கட்டாய தேர்ச்சிமுறை ரத்தாகின்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள "சி.ஏ.பி.இ" என்னும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை தாங்கினார். இதில் மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை செயலாளர்கள், கல்வியாளர்கள், சி.ஏ.பி.இ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 8 ஆம் வகுப்பு வரையில் மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கையை ரத்து செய்வதற்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகும்.
8 ஆம் வகுப்பு வரை மாணவர்களை "பெயில்" ஆக்குவதில்லை என்ற கொள்கை, கல்வி கற்றலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதில் மாநில அரசுகளிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்து கேட்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில கல்வி அமைச்சர்கள் தங்களுடைய முழுமையான ஆதரவினை தெரிவித்தனர்.
பள்ளியில் இருந்து இடையிலேயே நின்று விடுகிற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளின் நிலைமையை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சர்கள் அடங்கிய துணைக்குழு ஒன்று உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையை பொறுத்தமட்டில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும். அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் கழிவறைகள் கட்டுவதில் அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையைப் பொறுத்தமட்டில், நவம்பர்மாதம், முதல்வரைவு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். டிசம்பரில் அது தயாராகி விடும். 10 ஆம் வகுப்பு தேர்வை மீண்டும் அரசு தேர்வாக நடத்த பரிசீலிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.