ஜெ.வுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை வசூலிக்கவே முடியாதா?
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை வசூலிப்பது தொடர்பாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே உச்சநீதிமன்றத்திடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாம்.
ஒருபக்கம் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரிடம் அபராதத்தை வசூலிக்கத் தேவையில்லை என்று ஒரு குரூப் கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் சட்டப்படி பார்த்தால் ஜெயலலலிதா இறந்திருந்தாலும் கூட அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்க வேண்டும் என்று கூறுகிறது. இதனால்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து தெளிவுபடுத்திக் கொள்ள உச்சநீதிமன்றத்திடமே கேட்டு விடுவது என கர்நாடக அரசு தீர்மானித்துள்ளதாம். அந்த விளக்கத்திற்கேற்ப செயல்படவும் கர்நாடக அரசு தீர்மானித்துள்ளதாம்.
ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த தண்டனை ரூ. 100 கோடி அபராதம் மற்றும் 4 ஆண்டு சிறைத் தண்டனை. இதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. இருப்பினும் ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் அவருக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து விட்டது.
கைவிடப்படவில்லை
அதேசமயம், ஜெயலலிதாவுக்கான தண்டனை கைவிடப்படவில்லை. அப்படி உச்சநீதிமன்றம் அறிவிக்கவும் இல்லை. எனவே முறைப்படி பார்த்தால் அவருக்கான ரூ. 100 கோடி அபராதத்தை வசூலித்தாக வேண்டும். இங்குதான் சிலர் குழப்பி வருகின்றனர்.
கோர்ட் சொன்னது என்ன
உண்மையில் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் ஜெயலலிதா மறைந்து விட்டதால் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தது. ஆனால் அபராதம் கைவிடப்பட்டதாக அது கூறவில்லை. உண்மையில் ஒரு தண்டனை அல்லது அபரதத்தை கைவிட முடியுமா என்றால் கூற முடியும். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
விசாரணைக் காலத்தின்போது இறந்தால்
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில், விசாரணை நடந்து வரும் நிலையில் வாதங்கள் முடிவடையாத நிலையில் மரணித்தால், அவர் மீதான வழக்கே கைவிடப்படும். அவருக்கு தண்டனை அல்லது அபராதம் எதுவும் அறிவிக்கப்படாது.
வாதங்கள் முடிந்த பின் இறந்தால்
அதேசமயம், ஒரு நபர் வாதங்கள் எல்லாம் முடிந்து, தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தால் அவர் மீதான வழக்கு கைவிடப்படாது. அவருக்கான தண்டனையும் கூட கைவிடப்பட முடியாது. உயிருடன் இல்லை என்றால் தண்டனையை நிறுத்தி வைக்க மட்டுமே முடியும். அதேசமயம், அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அதை வசூலிக்க வேண்டும்.
ஜெயலலிதா விவகாரத்தில்
ஜெயலலிதா விவகாரத்தில் அவர் வாதம் எல்லாம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பின்னர்தான் மரணமடைந்தார். எனவே அவர் மீதான வழக்கையும் கைவிட வாய்ப்பில்லை. தண்டனை, அபராதத்தையும் கைவிட வாய்ப்பில்லை என்பதே சட்ட நிபுணர்களின் வாதமாகும். எனவே நிச்சயம் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்கலாம் என்று அவர்கள் சொல்கின்றனர்.
விரைவில் குழு
கர்நாடக அரசு இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கவுள்ளது. அதேசமயம், அபராதத்தை வசூலிப்பது தொடர்பாக ஒரு குழுவையும் விரைவில் அமைக்கவுள்ளது. இந்தக் குழு அபராதத்தை வசூலிக்கும் வேலையில் ஈடுபடும். உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட பின்னர் இந்தக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகுமாம்.