கணவரோ, மனைவியோ "அதற்கு" மறுத்தால்.. விவாகரத்து பெறலாம்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி
டெல்லி: திருமண வாழ்க்கையில் உடல் உறவும் ஒரு அங்கம். அதைத் தவிர்த்த திருமண வாழ்க்கை கிடையாது. செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள கணவரோ அல்லது மனைவியை யார் மறுத்தாலும் அதைக் காரணம் காட்டி விவாகரத்து பெறலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் 46 வயதான அகர்வால் (பெயர் மாற்றப்பட்டது). இவரது மனைவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு அப்பீல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கும், தனது கணவருக்கும் விவாகரத்து வழங்கி குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதபிதிகள் பிரதிபா ராணி மற்றும் பிரதீப் நந்த்ரஜோக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. விசாரணையின் இறுதியில் மனைவியின் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அகர்வால் விவாகரத்து பெறவும் கோர்ட் அனுமதி அளித்தது.
தொட விடாத மனைவி
அகர்வாலுக்கு 2007ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி திருமணம் நடந்தது. விவாகரத்தான அகர்வாலுக்கு இது முதல் திருமணமாகும். அப்போது அவரது புது மனைவி ரோகினிக்கு (பெயர் மாற்றப்பட்டது) 35 வயதாகும். திருமணத்திற்குப் பின்னர் முதலிரவன்று தன்னைத் தொட விடவில்லை ரோகினி. இதையடுத்து தேனிலவுக்கு சிம்லா போனார்கள். அங்கும் தொட விடவில்லை.
விவாகரத்து கேட்ட அகர்வால்
மீறித் தொட்டால் ஹோட்டல் மாடியிலிருந்து குதிப்பேன் என்று மிரட்டியுள்ளார் ரோகினி. ஊர் திரும்பியதும் தனது அம்மா வீட்டுக்குப் போய் விட்டார். பிறகு 3மாதம் கழித்துத் திரும்பி வந்தார். அப்போதும் தன்னைத் தொட விடவில்லை. பொறுத்துப் பார்த்த அகர்வால் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தை அணுகினார்.
நீதிமன்றம் உத்தரவு
எனது மனைவி என்னுடந் தாம்பத்தியத்தில் ஈடுபட மறுக்கிறார். தனது தாயாருடன் சேர்ந்து கொண்டு என்னை அவமதிக்கிறார். அடிக்கடி தனது நிறுவன உரிமையாளரின் வீட்டுக்குப் போய் தங்குகிறார். என் மீது பொய்யான புகார்களைக் கூறுகிறார். என்னால் சேர்ந்து வாழ முடியாது என்று கோரியிருந்தார். இதை விசாரித்த குடும்ப நீதிமன்றம் அகர்வாலுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
பொய்யான புகார்
இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரோகினி அப்பீல் செய்தார். அதை விசாரித்த கோர்ட் ரோகினியின் அப்பீலை தள்ளுபடி செய்தது. இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கணவர் குடிக்கிறார், மன ரீதியாக, உடல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்று ரோகினி கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொய்யான புகார்களாகவே தெரிகிறது. அதை விட முக்கியமாக உடலுறவுக்கு அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். அது நிரூபணமாகியுள்ளது.
உறவுக்கு மறுத்தால் விவாகரத்து
திருமண வாழக்கையில் செக்ஸ் இல்லாமல் அது எப்படி திருமண வாழ்க்கையாக முடியும். செக்ஸ் இல்லாத திருமண வாழ்க்கை அர்த்தமற்றது. கணவரோ அல்லது மனைவியோ யார் செக்ஸ் உறவுக்கு மறுத்தாலும் அதையே காரணம் காட்டி விவாகரத்து பெறலாம். மருத்துவ ரீதியான காரணங்கள் இருந்தால் மட்டுமே அதுகுறித்து பரிசீலனை செய்யலாம். மாறாக இயல்பான செக்ஸ் உறவுக்கு யார் மறுத்தாலும் அதைக் காரணம் காட்டி விவாகரத்து பெற முடியும். கோர முடியும்.
வேலை போக காரணம்
ரோகினி தனது கணவர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே அவரது மனு அளவில்தான் உள்ளன. எந்த ஒரு ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. மேலும் தனது கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவரது வேலை போகவும் ரோகினி காரணமாக இருந்துள்ளார். நாடகமாடி தனது கணவரின் வேலைக்கு அவர் உலை வைத்துள்ளார்.
நீதிபதிகள் தீர்ப்பு
மேலும் உடலறவுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததன் மூலம் மன ரீதியாக, அகர்வாலை ரோகினிதான் கொடுமைப்படுத்தியுள்ளார். இதை ஏற்க முடியாது. முதலிரவு தினத்தன்று மட்டுமல்லாமல் தொடர்ந்து பல மாதங்கள் அவர் தனது கணவரை தன் பக்கமே வர விடாமல் தடுத்துள்ளார். இது மிகப் பெரிய கொடுமை. அகர்வாலுக்கு அவரது மனைவியிடமிருந்து விடுதலை அளிக்கிறோம் என்று கூறி தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.