காங். தலைவர் பதவி... ராகுலுக்கு சோனியா வழிவிட வேண்டும்: கமல்நாத் பரபரப்பு பேட்டி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து சோனியா விலகி ராகுலுக்கு வழிவிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
இரண்டு வார ஓய்வில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் மாயமாகியுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள அனைத்து இந்திய காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக ராகுல் அறிவிக்கப் படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, ராகுலுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என திக்விஜய் சிங் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத். அதில் அவர் சோனியா தனது கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பாக அப்பேட்டியில் கமல்நாத் கூறியிருப்பதாவது :-
*ராகுல் ஓய்வெடுப்பது, கப்பலில் இருந்து மாலுமி குதித்து தப்பியோடிவிட்டதாக நாங்கள் கருதவில்லை. அவருக்கு தன்னுடைய இயல்பினை காட்டவும், கட்சி முடிவுகளை மதிக்கவும், புதிய திட்டங்களை தீட்டவும் விரும்புகிறார். இதுவும் அரசியல் பணி தான்.
*நாட்டின் அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. இந்த மாற்றத்தை காங்கிரஸ் ஏற்க வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
* தேர்தலில் தோல்வியடைந்துள்ளோம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். புதிய திட்டங்கள் தேவைப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தொண்டர்களுடன் இணைக்கும் வகையில், புதிய திட்டத்தை வகுத்து வருகிறது. இதற்காக ராகுல் கடுமையாக உழைக்கிறார்.
* ராகுலுக்கு முழு பொறுப்பு வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கருதுகிறேன். பொறுப்பை அவர் தோளில்சுமக்க வேண்டும். இதன் பின்னர் ஜெயிப்பதும், தோற்பதும் அவரது கையில் உள்ளது.
* சில நேரங்களில் ராகுல் வித்தியாசமாக செய்கிறார் என சோனியாவும், சோனியா வித்தியாசமாக செய்கிறார் என ராகுல் நினைப்பதுண்டு. இது தோல்வியை ஏற்படுத்திவிடுகிறது.
* தன்னுடன் இணைந்து பணியாற்றப்போவது யார் என்பதை முடிவு செய்யும் உரிமையை ராகுலுக்கு வழங்கவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்குவதை தான் யோசிக்க வேண்டும்
*ராகுல் விடுமுறை எடுத்துள்ளதை விசித்திரமாக கூறப்படுகிறது. அவர் மாயமாகவில்லை. லீவும் எடுக்கவில்லை. தான் செல்வதை அவர் அறிவித்துள்ளார்.
*சில கருத்துக்களை நான் சோனியாவிடம் கூறியதுண்டு. அப்போது அவர், ராகுலிடம் பேசுமாறு கூறியுள்ளார். ராகுலிடம் நான் கூறியபோது, சோனியாவிடம் பேசுவதாக கூறினார்.
* இன்று ராகுலா அல்லது சோனியாவா என முடிவு செய்ய வேண்டிய நேரம்.
*தலைமை பொறுப்பில் இல்லாதபோது ராகுலை கணிப்பது தவறு. அவரை கட்சி தலைவராக்க வேண்டும். அவரது திறமையை மக்கள் கணிக்கட்டும். அவரது திறமை என்ன என்பது தெரியும். அவர் தலைமை பொறுப்புக்கு வரும்போது அது வெளிப்படும்.
*சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இது நடைபெறவில்லை. ஏனென்றால் சிலர் இது நடக்க வேண்டாம் என விரும்பியவர்கள் தடுத்துவிட்டனர். ராகுல் தலைவராகும்போது, இது நடைபெறும். கட்சியில் பெரிய ஜனநாயகமாக இருக்கும்
* தற்போது கட்சியில் உள்ள நடைமுறை ராகுலுக்கு ஒத்துவரவில்லை. கட்சியை மாவட்ட மற்றும் கிராமங்களிலிருந்து வலுப்படுத்த வேண்டும்
*ராகுலை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும். கட்சியை வழிநடத்தி செல்லும் பொறுப்பை வழங்க வேண்டும். இது கட்சியை முன்னெடுத்து செல்லும் அல்லது தவறும். சோனியா கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும்
*எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்காதது எனக்கு வருத்தமில்லை. கட்சிக்காகநான் உழைத்து வருகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சவாலுக்கு ராகுல் தயார்:
இதேபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-
*காங்கிரசில் புதிய மற்றும் பழைய தலைவர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.
*காங்கிரஸ் கட்சியில் நிச்சயம் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
*அந்த மாற்றத்தை கொண்டுவர ராகுல் விரும்புகிறார்.
*தனக்கு உள்ள சவால்களை எதிர்கொள்ள ராகுல் தயாராக உள்ளார்.
*தான் கட்டுப்படுத்தப்படுவதாக ராகுல் விரும்புகிறார்.
*ராகுல் கட்சி தலைவராக வேண்டும்.
*மூத்த தலைவர்கள் இதனை புரிந்து கொண்டு, ராகுல் பாணி வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.