காலா திரைப்படத்துக்கு தடை இல்லை... பாதுகாப்பு வழங்கவும் தயார்: கர்நாடகா அரசு
காலா படத்தை வெளியிட கோரி கர்நாடக அரசை வற்புறுத்த முடியாது என்று தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் காலா படம் வெளியாக தடை இல்லை என்றும் திரைப்படம் வெளியாகும் போது பாதுகாப்பு அளிக்க தயார் என்றும் அம்மாநில அரசு உயர்நீதிமன்ற விசாரணையின் போது அதிரடியாக தெரிவித்திருக்கிறது.
வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏறப்டுத்தியுள்ளது. இந்த படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் மட்டும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநில திரைப்பட வர்த்தக சபை இந்த படத்தை திரையிட முடியாது என்று கூறியுள்ளது. காவிரி பிரச்சனையில் ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதால், கன்னட அமைப்புகள் அவர் மீது கோபத்தில் உள்ளது. இதனால் காலா திரையிடப்படும் இடங்களில் பிரச்சனை வர வாய்ப்பு இருப்பதால் படத்திற்கு தடை விதித்துள்ளனர்.
இதற்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். காலா படத்தை வெளியிட கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், காலா படத்துக்கு அரசு தடை ஏதும் விதிக்கவில்லை என்றார். அத்துடன் படத்துக்கு பாதுகாப்பு வழங்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிமன்றம், காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது. ஒரு படத்தை வெளியிட கோரி அரசை நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது. படக்குழுதான் அரசை அணுகி தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும்.
காலா பிரச்சனை குறித்து கர்நாடக அரசிடம் படக்குழு முறையிடலாம். அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம். அதே சமயம் கர்நாடகாவில் படம் வெளியானால் படத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
போலீஸ் எல்லா திரையரங்கிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், படம் திரையிடப்படும் போது அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். படக்குழு, கர்நாடகாவில் படம் வெளியாகும் தியேட்டர்களின் பட்டியலை அரசிடம் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளது.