இனியும் அவரின் அடி உதையை தாங்க முடியாது: தற்கொலை செய்த மாடல் அழகியின் உருக்கமான கடிதம்
டெல்லி: கணவரிடன் அடி உதையை இனியும் தாங்க முடியாது என்று தற்கொலை செய்து கொண்ட மாடல் அழகி பிரியங்கா கடிதம் எழுதி வைத்துள்ளார்.
டெல்லியில் மாடல் அழகி பிரியங்கா கபூர்(25) என்பவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யும் முன்பு எழுதி வைத்த கடிதத்தில் தனது முடிவுக்கு காரணம் தனது தொழில் அதிபர் கணவர் நிதின் சாவ்லா(38) என எழுதி வைத்துள்ளார்.
பிரியங்காவுக்கும், நிதினுக்கும் கடந்த மாதம் தான் திருமணம் நடைபெற்றது. பிரியங்கா தான் எழுதி வைத்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
நான் இரவு நேரத்தில் பப் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது என் கணவருக்கு பிடிக்கவில்லை. நான் பப் மற்றும் பார்களுக்கு செல்வதை அவர் தடுக்கிறார். இதற்காக அவர் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்.
இனியும் என்னால் அடியை தாங்க முடியாது. நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நிதின் கூறுகிறார். அதனால் நான் உலகை விட்டே செல்கிறேன். நிதினின் முதல் மனைவிக்கு பிறந்த 10 வயது மகன் வீட்டிற்கு வந்தபோது அவர் என்னுடன் வாக்குவாதம் செய்து வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார்.
யாருமே இல்லையே என்ற ஒரு ஆதங்கத்தில் தான் நான் நிதினை அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நிதின் வரதட்சணை கேட்டு பிரியங்காவை அடித்து துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தார் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.