பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை சகிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
பசு பாதுகாப்பு என்ற பெயரிலான வன்முறைகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது; இதனைத் தடுக்க உரிய சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட இந்தியாவின் பல மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகளும் சிறுபான்மை மக்களும் அடித்துக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை சகிக்கவும் அனுமதிக்க முடியாது. நாடு முழுவதும் நடைபெற்ற இத்தகைய வன்முறைகள் கடும் கண்டனத்துக்குரியது.
பொதுமக்களே சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொள்வதை ஏற்க முடியாது. இதுபோன்ற வன்முறைகளை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். பசு பாதுகாப்பு பெயரிலான வன்முறைகளைத் தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
இத்தகைய சம்பவங்களை எந்த விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை 4 வார காலத்துக்குள் மத்திய அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.