புனித வெள்ளியன்று நோ மீட்டிங்.. தலைமை நீதிபதி தத்துவுக்கு கடிதம் எழுதிய நீதிபதியால் சர்ச்சை!
டெல்லி: புனிதவெள்ளி தினத்தன்று, நீதிபதிகள் ஆலோசனை கூட்டத்திற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அழைப்புவிடுத்ததற்கு, நீதிபதி குரியன் ஜோசப் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல, தலைமை நீதிபதிக்கு எதிராக கடிதம் எழுதுவது மரபுக்கு மாறானது என்பதால், இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.
தலைமை நீதிபதிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, இன்று ஏற்பாடு செய்திருந்தார். இதுகுறித்து கலந்துகொள்ள வேண்டிய, அனைத்து நீதிபதிகளுக்கும், தத்து கடந்த மாதம், கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், மார்ச் 18ம்தேதி, உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், தலைமை நீதிபதிக்கு எழுதிய பதில் கடிதத்தில், "புனிதவெள்ளியன்று இதுபோன்ற கூட்டங்களை நடத்துவது சரியில்லை. தசரா, தீபாவளி, ரம்ஜான் போன்ற பண்டிகைகளின்போது, இப்படிப்பட்ட கூட்டங்கள் நடத்தப்படாத போது, புனிதவெள்ளியன்று நடத்துவது மதநல்லிணக்கத்தை நாம் பேணவில்லை என்பதுபோல வெளிக்காட்டிவிடும். பிற அமைப்புகளும் இதேபோல செய்ய ஆரம்பிப்பார்கள். புனிதவெள்ளி தினத்தில், மத சடங்குகள், குடும்பத்தோடு இணைந்திருப்பது போன்ற பிற வேலைகள் இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மார்ச் 20ம்தேதி பதில் கடிதம் எழுதிய, தத்து, "2 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ள ஒரு முக்கியமான ஆலோசனை கூட்டத்தை விடுமுறை, தினத்தையும், புனித தினத்தையும் காரணம் காண்பித்தோ கேள்வி கேட்கிறார் நமது சகோதர நீதிபதி.
உங்களிடம் கேட்க முடியாது என்பதால், என்னை நானே கேட்டுக்கொள்கிறேன், எனது முதல் முன்னுரிமை, நீதிமன்ற அமைப்புக்கா, அல்லது எனது தனிப்பட்ட விருப்புக்கா என்றால், நான் முதல் சாய்சுக்குதான் தலையசைப்பேன்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் பலரும், தங்களது குடும்பத்தை விட்டுவிட்டு நீண்ட தூரம் பயணித்துதான் டெல்லி வர உள்ளனர். உங்களுக்கு குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றால், மீட்டிங் நடைபெறும் அன்று உங்கள் குடும்பத்தையும், டெல்லி வரச்சொல்லுங்கள். பணி மற்றும் குடும்பத்தை பேலன்ஸ் செய்தது போலாகும். இவ்வாறு தலைமை நீதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.