மோடியின் பீகார் தேர்தல் பிரசார கூட்டங்கள் ரத்து... பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா கடும் அதிருப்தி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பீகார் தேர்தல் பிரசார கூட்டங்கள் கடைசிநேரத்தில் ரத்து செய்யப்பட்டது பொதுமக்களிடத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க. எம்.பி.யான நடிகர் சத்ருகன் சின்ஹா எச்சரித்துள்ளார்.
பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. இத்தேர்தலுக்கு முன்னரே, பீகாரில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிக்க வேண்டும் என்று கலகக் குரல் எழுப்பியிருந்தார் பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா.
அத்துடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் நெருக்கமாகவும் இருந்து வந்தார். இது பா.ஜ.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது. பீகார் பா.ஜ.க. தேர்தல் பிரசாரங்களில் சத்ருகன் சின்ஹா அழைக்கப்படவும் இல்லை.
இதனிடையே பீகாரில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த தேர்தல் பிரசார கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. தோல்வி பயத்தால்தான் பிரதமர் மோடி பிரசாரத்தை ரத்து செய்துவிட்டதாக ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சித்து வருகின்றன.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சத்ருகன் சின்ஹா, கடைசி நேரத்தில் பிரதமர் மோடியின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இப்படி பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு மாநில பா.ஜ.க. தலைவர்களே காரணம் என்றும் விமர்சனம் செய்துள்ளார் சத்ருகன் சின்ஹா.
Sri Mohan Bhagwat's views on review of reservations should be taken seriously. We hold the views of the RSS supremo in high esteem.
— Shatrughan Sinha (@ShatruganSinha) October 18, 2015
இடஒதுக்கீடு விவகாரம்
மற்றொரு ட்விட்டர் பதிவில், கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்தை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அவருடைய இந்தக் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்றும் சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.
A situation that led our star campaigner PM to cancel his Bihar rallies at the last minute...sending a negative message???
— Shatrughan Sinha (@ShatruganSinha) October 17, 2015
இதனிடையே கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சத்ருகன் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசுகையில், பீகாரில் பிரசாரம் செய்ய கட்சி சார்பில் எனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது தவறு; கட்சி அழைப்பு விடுத்தால் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றார்.