கேஎஃப்சி, மெக்டொனால்ட்ஸ் பிரட்களில் கேன்சரை உருவாக்கும் வேதிப்பொருட்கள்?
டெல்லி்; டெல்லியில் பிரபலமான உணவகங்களில் வழங்கப்படும் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியின் முக்கிய பகுதிகளில் செயல்பட்டுவரும் கேஎஃப்சி, டொமினோஸ், பீட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட பிரபலமான உணவங்களில் இருந்தும், கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரட்களில் இருந்தும் மொத்தம் 38 மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 84 சதவீத பிரட்களில் அதாவது 32 மாதிரிகளில் பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப்பொருள்கள் கலந்துள்ளன.
பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட் உள்ளிட்ட பிரட்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சாண்ட்விச் பிரட், வொயிட் பிரட், பாவ், பன் ஆகியவற்றில் அதிக அளவில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் தடை
இந்த வேதிப்பொருட்கள் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இந்த வேதிப்பொருள்கள் கலந்த பிரட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வேதிப்பொருட்கள் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு தைராய்டு பிரச்னை முதல் புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்.
விசாரணைக்கு உத்தரவு
இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடத்தப்பட்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நிறுவனங்கள் மறுப்பு
இந்த புகார்களை, பிரிட்டானியா, கேஎஃப்சி, டோமினோஸ், மெக்டொனால்ட்ஸ், சப்வே ஆகிய நிறுவனங்கள் மறுத்துள்ளன. மேலும், தங்கள் தயாரிப்புகளில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருள்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளன.
புதிய உத்தரவு
இந்த தகவல் வெளியானதையடுத்து, உணவுப்பொருள்களில் அனுமதிக்கப்பட்டுள்ள வேதிப்பொருள்களின் பட்டியலில் இருந்து பொட்டாசியம் புரோமேட்டை நீக்க இருப்பதாகவும், பொட்டாசியம் அயோடேட் கலக்கும் அளவைக் குறைத்து நிர்ணயிக்க இருப்பதாகவும் இந்திய உணவுப் பாதுகாப்பு, தரநிர்ணய ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.