என் பொண்டாட்டி தோத்துட்டா.. வாங்கிய காசை திருப்பி கொடுங்க.. வேட்பாளரின் கணவர் அதிரடி!
ஓட்டு போட தந்த பணத்தை வாக்காளர்களிடம் வேட்பாளரின் கணவர் வசூல் செய்தார்.
Recommended Video
தெலங்கானா: "சத்தியம் பண்ணுங்க.. யாருக்கு ஓட்டு போட்டீங்க? ஓட்டு போடாதவங்க எல்லாம் என் பணத்தை திருப்பி தாங்க" என்று உப்பு பிரபாகரன் வீடு வீடாக அட்சதையை எடுத்து கொண்டு போய் கொண்டிருக்கிறார். யார் இந்த உப்பு பிரபாகரன்? எதற்காக இந்த அட்சதை? என்பதை பார்ப்போம்.
ஜெய்ரெட்டிகுடம் கிராமத்தில் கடந்த 25-ம்தேதி பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தது. இதில் ஹேமாவதி பிரபாகர் என்ற பெண் போட்டியிட்டார். இவரின் கணவர் பெயர் உப்பு பிரபாகர். இவர் சில பிரச்சனை காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்.
இதனால் தனது மனைவியை எப்படியாவது பஞ்சாயத்து தேர்தலில் நிற்கவைத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என்று படு ஆர்வமாக தேர்தல் வேலையில் இறங்கினார். ஜக் சின்னத்தை தேர்ந்தெடுத்தார். அந்த வார்டில் மொத்தம் இருந்ததே 264 வாக்குகள்தான். இருந்தாலும் மனைவிக்காக ஓடி ஓடி வாக்கு சேகரித்தார்.
சரக்கு பாட்டில்
யாராக இருந்தாலும் மதுவுக்கு விழுந்துவிடுவார்கள் என்று நினைத்த உப்பு பிரபாகர் ஒவ்வொரு வீடாக சென்று சரக்கு பாட்டில்களை தந்தார். கூடவே மனைவியின் தேர்தல் சின்னமான ஜக்-கையும் அதனுடன் ரூ.800 முதல் 1500 வரை ஒவ்வொரு வீட்டுக்கும் தந்தார். அது மட்டும் இல்லை, அந்த வார்டில் யார் சரக்கு கேட்டாலும் உடனே குஷியாக வாங்கி தந்துவிடுவார்.
செலவு செய்தார்
ஆனாலும் ஹேமாவதிக்கு 24 வாக்குகள் மட்டுமே கிடைத்து தோல்வி அடைந்துவிட்டார். மனைவி தோற்று போனதை உப்பு பிரபாகரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. இந்த வார்டு மக்களுக்காக இவ்ளோ செலவு செய்தோமே, வாக்கு போடாதவர்கள் எதுக்காக தன் பணத்தை வைத்திருக்க வேண்டும் என்று நொந்து கொண்டார்.
அரிசி, மஞ்சள் கலவை
பிறகு ஒரு கட்டத்தில் பணம் போனதை தாங்கவே முடியவில்லை, அதனால் 2 நாளாக அந்த பணத்தை திரும்ப வாங்கும் வேலையில் இறங்கி உள்ளார். மங்கலகரமான அட்சதையை அதாவது அரிசியும், மஞ்சளும் கலந்த கலவையை கையில் எடுத்து கொண்டு ஒவ்வொரு வீடாக சென்றார்.
திருப்பி தாங்க
உண்மையிலேயே என் மனைவிக்குதான் ஓட்டு போட்டீங்கன்னா, இந்த அட்சதை மேல கை வெச்சு சத்தியம் பண்ணுங்க. இல்லேன்னா நான் குடுத்த அந்த பணத்தை திருப்பி தாங்க என்றார். அட்சதையை பார்த்ததும், கடவுள் பக்தி நிறைந்த மக்கள், பொய் சத்தியம் செய்ய விரும்பவில்லை. அதனால் வாக்களிக்க வாங்கிய பணத்தை திருப்பி தந்து கொண்டிருக்கிறார்கள்.
வீடியோ வைரல்
இப்படி அட்சதையை எடுத்துக் கொண்டு வீடு வீடாக ஓட்டுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வரும் உப்பு பிரபாகரனின் வீடியோ வெளியாகி வைரலாகவும் போய் கொண்டிருக்கிறது.