நீர் திறப்பு குறித்து முடிவெடுக்க முடியாது... கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் #cauveryverdict
பெங்களூரு: காவிரியில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என்று மீண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியாது என்று கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியுள்ளார்.
கடந்த 21ம் தேதியில் இருந்து 27ம் தேதியில் வரை தினமும் 6000 கன அடி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக கர்நாடக அரசு சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானத்திற்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொண்டது. மேலும் 3 நாட்களுக்கு 6000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
எத்தனை முறை சுப்ரீம் கோர்ட் கர்நாடகத்திற்கு கண்டனம் தெரிவித்தாலும் அதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாத கர்நாடக அரசு இந்தத் தீர்ப்பையும் அலட்சிய படுத்தும் வகையில் பேசி வருகிறது.
கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும், இது தொடர்பான எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், அனைத்து தலைவர்களையும் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக பேசி முடிவெடுக்க தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.