ஆந்திரா கோர்ட் பிடிவாரண்ட்: கைதாகிறார் 'தல' டோணி?
ஹைதராபாத்: இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திரா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி விஷ்ணு அவதராத்தில் உள்ள புகைப்படம் பிசினஸ் டுடே பத்திரிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வந்தது. அட்டைப்படத்தில் வந்த அந்த புகைப்படத்தில் டோணியின் பல கைகளில் லேஸ் சிப்ஸ், பூஸ்ட் பாக்கெட், கோக், ஷூ உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தன.
இந்த புகைப்படம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாகக் கூறி ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஒய். ஷ்யாம் சுந்தர் என்பவர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அனந்தபூர் நீதிமன்றம் டோணி நேரில் ஆஜராகுமாறு 3 முறை உத்தரவிட்டது. ஆனால் டோணி மூன்று முறையுமே ஆஜராகவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. டோணி ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.