சர்வதேச கடல் நிறுவனத்தின் வீர தீரச் செயலுக்கான விருதுக்கு ராதிகா தேர்வு
டெல்லி: சர்வதேச கடல் நிறுவனம் (International Maritime Organisation) வழங்கும் வீர தீர செயலுக்கான விருது இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ராதிகா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்த விருதைப் பெறும் முதல் பெண் ராதிகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டுக்கான வீர விருது பெற ராதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்கக் கடலில் உணவு உள்ளிட்டவற்றை இழந்து விட்டு, சீற்றம் மிகுந்த நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 மீனவர்களைக் காத்து அவர்களை உயிருடன் மீட்ட செயலுக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. நவம்பர் 21ம் தேதி லண்டனில் உள்ள சர்வதேச கடல் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறும் விழாவில் ராதிகாவுக்கு இந்த விருது வழங்கப்படும்.
சர்வதேச அளவில் தங்களது உயிரையும் பணயம் வைத்து இதுபோன்ற மீட்புகளில் ஈடுபடுவோருக்கு அங்கீகாரம் தரும் வகையில் இந்த விருதை ஐஎம்ஓ ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு ராதிகாவின் பெயரை மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.