பேஷன்ட்டை "பேஸ்பால்" பேட்டால் சரமாரியாக தாக்கிய கும்பல்... சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!
ஜலந்தர் : பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவமனையில் புகுந்து 2 நோயாளிகளை மர்ம நபர்கள் பேஸ்பால் பேட்டால் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மர்மநபர்கள் சிலர் கையில் பேஸ்பால் பேட் மற்றும் குச்சிகளுடன் அதிரடியாக நுழைந்தனர். நேராக நோயாளிகள் பகுதிக்குச் சென்ற அவர்கள், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 2 நோயாளிகள் மீது சரமாரித் தாக்குதல் நடத்தினர்.
மர்மநபர்களின் தாக்குதலைத் தடுக்காமல் மருத்துவமனைக் காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்துள்ளனர். மருத்துவர்களின் அறைகளும் மூடியே கிடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது தாக்குதலுக்கு ஆளான நபர், முன்னதாக இதே நபர்களால் வெளியில் தாக்கப் பட்டார். அதற்கு சிகிச்சைப் பெறுவதற்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபர்களைத் தேடி வருகின்றனர்.
மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகளைச் சிலர் சரமாரியாகத் தாக்கிய சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.