மகளை கொன்று இரவு முழுவதும் காரில் மறைத்து வைத்த இந்திராணி
மும்பை: மகளை கொலை செய்து காரில் மறைத்து ஒரு நாள் இரவு முழுவதும் கேரரேஜில் வைத்திருந்தது ஸ்டார் டி.வி., முன்னாள் சி.இ.ஓ மனைவியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மகளை கொலை செய்த வழக்கில் ஸ்டார் இந்தியா டிவி நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ஆகஸ்ட்31 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷீனா போரா.
இவர் மும்பையில் வோர்லி பகுதியில் வசித்து வந்தார். இவர் இந்திராணி முகர்ஜியின் மகள் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டில் காணாமல் போனார். பின்னர் நடந்த விசாரணையில், ஷீனா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பந்த்ரா மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இந்திராணியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்ததால் ஆகஸ்ட் 31வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக பீட்டர் முகர்ஜி இருந்த போதுதான் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆனது.
பீட்டர் - இந்திராணியின் திருமணம் 2002 ஆம் ஆண்டு நடைபெற்றது. மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்த இந்திராணி, பீட்டரின் இரண்டாவது மனைவியாவார். கடந்த 2012ம் ஆண்டு தனது மகள் ஷீனாவை கொலை செய்து அவரது உடலை யாருக்கும் தெரியாமல் வீசிவிட்டார்.
அதற்கு முன்னதாக ஷீனாவை கொலை செய்து காரில் மறைத்து சுற்றி விட்டு, பின்னர் தனது வீட்டில் உள்ள கேரேஜில் மறைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக்கொலைக்காண காரணம் பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.