சூரத் டூ மும்பை பறந்து வந்த இதயம்.. 'கிரீன் காரிடார்' மூலம் புது வாழ்வு பெற்ற பெங்களூர் தொழிலதிபர்
மும்பை: சூரத்தில் கார் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், மும்பைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டு 52 வயது நோயாளிக்கு பொருத்தப்பட்டது. இதேபோல் பெங்களூரில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மாணவரின் இதயம் இளைஞர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பட்டேல் (43). கார் விபத்தில் சிக்கிய இவர் மூளைச் சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முலுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்வர் கான் என்ற 52 வயது நோயாளிக்கு இதயம் பாதிக்கப்பட்டிருப்பதும், மாற்று இதயத்திற்காக அவர் காத்திருப்பதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பட்டேலின் இதயத்தை அன்வருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பட்டேலின் இருதயம் வாகனம் மூலம் முலுண்ட் கொண்டு செல்லப்பட்டு, அன்வருக்கு பொருத்தப்பட்டது.
இதற்காக, போலீசாரின் உதவியுடன் முலுண்ட்-சூரத் இடையிலான 269 கி.மீ தூரத்தை இதயம் கொண்டு செல்லப்பட்ட வாகனம் 1 மணி 32 நிமிடத்தில் கடந்து சாதனை செய்தது.
இதயம் மட்டுமின்றி பட்டேலின் சிறுநீரகங்களும்,நுரையீரலும் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேருக்கு பொருத்தப்பட்டன.
இதேபோல், பெங்களூரில் தனியார் கல்லூரில் பியுசி படித்து வந்த கிரண்குமார் என்ற 17 வயது மாணவர் கடந்த 17ம் தேதி பைக் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். கிரணின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பெங்களூரு ஓசூர் சாலையில் இருக்கும் நாராயணா இருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த டெல்லியைச் சேர்ந்த ரிஷி சிவகொடி(35) என்ற தொழில் அதிபருக்கு கிரணின் இதயம் பொருத்தப்பட்டது.
இதயம் எடுத்துச் செல்லப்பட்ட சாலைகளில் "கிரீன் காரிடார்" அமைத்து பூஜ்ய சிக்னல் அமைத்து போலீசார் உதவினர். இதனால், கிரணின் இதயம் 30 கிமீ சாலையை 32 நிமிடங்களில் நாராயணா இருதாலயா மருத்துவமனைக்கு சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.