தப்பிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.. கான்வாய் காரை 'கவிழ்த்த' பசு மாடு!
Recommended Video
நாக்பூர்: பசு மாடு மீது மோதாமல் இருக்க முயற்சி செய்தபோது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாதுகாப்புக்குச் சென்ற, கார் பல்டியடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர்-நாக்பூர் நடுவேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில், வரோரா என்ற பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு இசெட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று அவர் சந்திராப்பூரிலிருந்து, நாக்பூருக்கு, தனது காரில், சென்று கொண்டிருந்தார்.
சாலையின் குறுக்கே பசு மாடு
மோகன் பகவத் பயணித்த காரும், அவரது கான்வாய் கார்களும் வேகமாக பயணித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக, பசுமாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றுள்ளது. அதிருஷ்டவசமாக மோகன் பகவத் சென்ற கார், பசுமாட்டைத் தாண்டிச் சென்றுவிட்டது. ஆனால், பின்னால் வந்த கான்வாய் வாகனம் ஒன்றுதான் விபத்தில் சிக்கிக் கொண்டது.
கார் பல்டி
பசு மாட்டை திடீரென சாலையில் பார்த்ததும், கான்வாய் டிரைவர், அதன் மீது மோதாமல் இருக்க வேகமாக பிரேக் போட்டுள்ளார். காரை வேறு பக்கமாக திருப்பியுள்ளார். இதனால் அந்த கார் பல்டியடித்தது. இந்த சம்பவத்தில், காரில் பயணித்த சிஆர்பிஎப் ஜவான் ஒருவர் காயமடைந்தார்.
பாதுகாப்பு வீரருக்கு காயம்
"பல்டியடித்த கார் எஸ்யூவி வகையை சேர்ந்தது. அதில் மொத்தம் 6 சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். கார் பல்டியடித்ததில், மற்ற வீரர்கள் காயமின்றி தப்பினர். ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்த சிஆர்பிஎப் வீரர், நாக்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பிற கான்வாய் வாகனங்கள் குறிப்பிட்ட ஷெட்யூல்படி பயணித்தன.
கடந்த கால விபத்து
2017ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி, மோகன் பகவத் சாலை விபத்து ஒன்றில் சிக்கினார். அவர் பயணித்த கார், மற்றொரு கார் மீது மோதியது. இந்த சம்பவம், உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்திலுள்ள யமுனா ஹைவே பகுதியில் நடந்தது. அதிருஷ்டவசமாக அப்போதும் மோகன் பகவத் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.