மோடியை ஆபாசமாக சித்தரித்த கார்ட்டூனிஸ்ட்.. பல மாநிலங்களிலும் வழக்கு பாய்கிறது
பிரதமர் மோடியை 'அசிங்கமாக' சித்தரித்து கார்ட்டூன் வரைந்ததாக கார்ட்டூனிஸ்ட் மீது புகார் எழுந்துள்ளது.
பெங்களூரு: மிதேஷ் பட்டேல் என்ற கார்ட்டூனிஸ்ட் பிரதமர் மோடி குறித்து அசிங்கமான முறையில் கார்ட்டூன் வரைந்து அதை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என கர்நாடக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த கே.அமரேஷ் என்பவர் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.
மிதேஷ் பட்டேல்,'நேஷனலிஸம்' என்று தலைப்பிட்டு, மோடியை ஆபாசமாக வரைந்துள்ளார் என பெங்களூரு மல்லேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், முறைப்படி விசாரணை மேற்கொண்ட பிறகு மிதேஷ் பட்டேல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்வோம் என துணை போலீஸ் கமிஷனர் லாபு ராம் தெரிவித்துள்ளார்.
மிதேஷ் மீது, தற்போது பல மாநிலங்களிலும் பாஜகவினர் புகார்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். நாடு தழுவிய அளவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் உத்தியாக இது பார்க்கப்படுகிறது. உ.பி முன்னாள் அமைச்சர் ஐ.பி.சிங் மிதேஷ் மேல் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அவர் மேல் புகார் கொடுக்கும் என பாஜக செய்தி தொடர்பாளர் ஷாந்தாராம் தெரிவித்துள்ளார்.
மிதேஷ் தன் டுவிட்டர் முகப்பு படமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் புகைப்படத்தை வைத்திருக்கிறார். அதனால் அவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர், அதனால் பிரதமர் மேல் அவதூறுகளை பரப்புகிறார் என்கிறார் ஷாந்தாராம்.
மிதேஷ், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.