கார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசு.. கிரண்குமார் பெருமிதம்!
கார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கான புத்தாண்டு பரிசு என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா: கார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கான புத்தாண்டு பரிசு என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்டை 31 செயற்கைகோள்களுடன் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இதில் 28 செயற்கைகோள்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தது. மூன்று கார்டோசாட், மைக்ரோ, மேக்ரோ செயற்கைகோள்கள் இந்தியாவினுடையது.
இது இந்தியாவின் 100வது செயற்கைகோள் ஆகும். இந்நிலையில் இன்று காலை 9.28 மணிக்கு 31 செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய அதன் தலைவர் கிரண்குமார், கார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசு என்றார்.
செயற்கைகோள் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகவும் கிரண்குமார் கூறினார். மேலும் செயற்கைகோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.