ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாவதற்கு எதிர்ப்பு.. வக்கீல் மனு மீது இன்று விசாரணை!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து தற்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில் ரஞ்சன் கோகாயின் பதவி ஏற்பு விழாவிற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க தகுதி இல்லாதவர் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழா
ரஞ்சன் கோகாயை தலைமை நீதிபதியாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பரிந்துரையை சட்ட அமைச்சகம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த நிலையில் அக்டோபர் 3ம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார்.
மனு தாக்கல்
இந்த நிலையில் இவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆர்.பி லூத்ரா என்ற மூத்த வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பது முறையான விஷயம் கிடையாது என்று மனு தாக்கல் செய்துள்ளார்.
காரணம் 1
இதற்கு அவர் இரண்டு காரணம் சொல்லியுள்ளார். அதில், சில வாரம் முன் நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி மதன் லோகுர், நீதிபதி குரியன் ஜோசப், நீதிபதி செல்லமேஸ்வர் ஆகிய நால்வரும் சேர்ந்து சில வாரங்களுக்கு முன் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். வழக்கு ஒதுக்கீட்டில் நேர்மையான முறை பின்பற்றப்படவில்லை என்று இவர்கள் குற்றச்சாட்டு வைத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதனால் ரஞ்சன் கோகாய் நீதித்துறை அவமானப்படுத்திவிட்டார், அவரை தலைமை நீதிபதியாக கூடாது என்று மனுதாரர் கூறியுள்ளார்.
காரணம் 2
அதேபோல் நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதித்துறைக்கு எதிராக பேசி மக்களிடையே கிளர்ச்சியை உண்டாக்க முயன்று இருக்கிறார். நீதிமன்ற அலுவலக செயல்பாட்டில் இருக்கும் சிறிய பிரச்சனைகளை பெரிதுபடுத்தி இப்படி கிளர்ச்சியை உண்டாக்க முயல்கிறார். அவருக்கு இந்த உயர் பதவி வழங்கப்பட கூடாது என்று இவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இன்று விசாரணை
இந்த மனு மீதான இன்று விசாரணை நடக்கிறது. தற்போதையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதி ஏஎம் கான்வில்கர், நீதிபதி சந்திராசாத் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. மிகவும் பரபரப்பான கட்டத்தில் இந்த அமர்வு கூட இருக்கிறது.