'ஆல்கஹாஸ் கம்மியாதானே இருக்கு... பீர், ஒயினை நெடுஞ்சாலைகளில் விற்கலாமா யுவர் ஹானர்?'
டெல்லி: பீர் மற்றும் ஒயின் வகைகளில் ஆல்கஹால் சதவீதம் குறைவாக இருப்பதால், நெடுஞ்சாலையோரக் கடைகளில் அவற்றை விற்க அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கேரளா பீர் மற்றும் ஒயின் கடை உரிமையாளர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும், அங்கிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளும் மதுக்கடைகள் இயங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இதனால் பல ஆயிரக்கணக்கான மதுக் கடைகள் மூடப்பட்டுவிட்டன.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உள்ளிட்ட பல மாநில அரசுகள் மேல் முறையீடு செய்துள்ளன.
இந்நிலையில், கேரளாவில் உள்ள பீர் மற்றும் ஒயின் கடை உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், "பீரில், 6 சதவீதம் மற்றும் ஒயினில், 12 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் கலந்துள்ளது. இவற்றை விற்கும் பீர் மற்றும் ஒயின் கடைகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் தடை பொருந்துமா? பல லட்சம் ரூபாய்க்கு பீர், ஒயின் வாங்கி வைத்திருந்தோம். திடீரென தடை விதிக்கப்பட்டதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால், பீர் மற்றும் ஒயின் கடைகளை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்," என்று கேட்டுள்ளனர்.