நாங்களும் போடுவோம்ல.. குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.
கர்நாடக சட்டசபையில் 104 இடங்களை கைப்பற்றிய பாஜகவும் மஜத - காங்கிரஸ் கூட்டணியும், ஆட்சியமைக்க உரிமை கோரி போட்டி போட்டுக்கொண்டு ஆளுநருக்கு கடிதம் கொடுத்தனர்.
மெஜாரிட்டி இல்லாத நிலையில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் வஜூபாய் வாலா. இதைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி கர்நாடகாவின் 23வது முதல்வராக ஆட்சியமைத்தார் எடியூரப்பா.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்து மஜத - காங்கிரஸ் கூட்டாக தொடர்ந்த வழக்கை 18ஆம் தேதி மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம், 19ஆம் தேதி மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
பதவி விலகிய எடியூரப்பா
ஆனால் அதுவரை பெரும்பான்மைக்கு தேவையான எஞ்சிய 7 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே பதவி விலகினார் முதல்வர் எடியூரப்பா.
குமாரசாமிக்கு எதிராக வழக்கு
இதைத்தொடர்ந்து வரும் 23ஆம் தேதி கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்கிறார் மஜத கட்சியின் குமாரசாமி. இந்நிலையில் குமாரசாமி பதவியேற்பை கண்டித்த அகில பாரத ஹிந்து சபா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்திற்கு எதிரானது
மஜத- காங்கிரஸ் கூட்டணியை பதவியேற்க ஆளுநர் அழைத்ததை ரத்து செய்யக்கோரி அகில பாரத ஹிந்து சபா தனது மனுவில் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அகில பாரத ஹிந்து சபா தனது மனுவில் தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.