டிசம்பர் 6: ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்த வேண்டாம்- பாபர் மசூதி நடவடிக்கைக் குழு வேண்டுகோள்!
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு தினமான நாளை எந்த ஒரு போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்த வேண்டாம் என்று பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் இலியாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை.. பாபர் மசூதி இடிப்பு தினம் இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.. பாபர் மசூதி இடிப்பு பிரச்சனை 'செத்துப் போன' ஒன்று என உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மிகமூத்த வாதியான முகமது ஹசீம் அன்சாரியோ, வழக்கில் இருந்து தாம் விலக விரும்புவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினருமான இலியாஸ் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
கேள்வி: ஹசீம் அன்சாரியின் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: ஆசாம் கான் கூறியதற்கு பதிலாகத்தான் ஹசீம் அன்சாரியின் அறிக்கையைப் பார்க்க வேண்டும். ஒருகாலத்தில் பாபர் மசூதி பிரச்சனையை முன்னெடுத்துச் சென்ற ஆசாம் கான் இப்போது அது செத்துப் போன ஒன்று என்கிறார். இதனால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடாகவே அன்சாரி அப்படிக் கூறியிருக்கிறார். கடந்த 50 ஆண்டுகாலமாக இந்த விவகாரத்தில் உணர்வுப்பூர்வமாக போராடி வருபவர் ஹசீம் அன்சாரி.
கேள்வி: ஹசீம் அன்சாரியின் முடிவால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் பாதிப்பு ஏற்படுமா?
பதில்: உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் 8 பேர் முறையீடு செய்துள்ளனர். இதில் ஒருவர் விலகினாலும் கூட அது வழக்கைப் பாதிக்காது. இந்த வழக்கான முஸ்லிம் மக்கள் Vs உ.பி. மாநில அரசு Vs மத்திய அரசு என்றாகத்தான் இருக்கிறது. மேலும் சிலரும் விலகினாலும் கூட இந்த வழக்குக்கு பாதிப்பு இல்லை.
கேள்வி: அன்சாரியை சமாதானப்படுத்த முயற்சிப்பீர்களா?
பதில்: இப்போது அப்படி எதுவும் செய்யப் போவதில்லை.. அவரே சமாதானமாகிவிடுவார். அவர் மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக இருக்கிறார். இதுவரை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக எந்த ஒரு பிரமாண பத்திரமும் அவர் தாக்கல் செய்யவும் இல்லை. அவர் சமாதானமாகி தொடர்ந்தும் இந்த வழக்கில் போராடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற கருத்துகள் வெளிப்படுவது என்பது இயல்பான ஒன்றுதான்..
கேள்வி: ஆசாம் கானின் அறிக்கை பறி...
பதில்: ஆசாம் கான் அறிக்கை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாகவே நான் உணருகிறேன். விஸ்வ ஹிந்து பரிசத் தெரிவித்த கருத்துக்கு பதிலாக கூறும்போது, பாபர் மசூதி பிரச்சனை முடிந்து போன ஒன்று.. அதை விஸ்வ ஹிந்து பரிசத் இப்போது எழுப்புவது சரியல்ல எனக் கூறியிருந்தார். அதே நாளில் அனைத்திய முஸ்லிம் சட்ட வாரியமும் ஆசாம் கானின் அறிக்கையை ஊடகங்கள் வெளியிட்ட முறை சரியல்ல என்று சுட்டிக்காட்டினோம்.
கேள்வி: உச்சநீதிமன்றத்தில் என்ன மாதிரியான வாதங்களை முன்வைக்க உள்ளீர்கள்
பதில்: மசூதி என்பது சுவரையும் செங்கல்லையும் கொண்டது மட்டுமல்ல. அது ஒரு மதவழிப்பாட்டுத் தலம். அது எங்களுக்குச் சொந்தமானது. கோயிலை நீங்கள் வேறு இடத்துக்கு மாற்றினாலும் மசூதி அங்கே இருக்கத்தான் செய்யும். எமக்கான நீதி கிடைக்கும் வரை கடைசி வரை போராடுவோம். இருப்பினும் என்ன மாதிரியான தீர்ப்பளிக்கப்பட்டாலும் அதனை ஏற்போம்.
இந்த பிரச்சனை 50 ஆண்டுகாலத்துக்கு மேலாக இருந்து வருகிறது. இதில் முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றமே தவிர ஊடகங்கள் அல்ல.
கேள்வி: மேல்முறையீட்டு விசாரணை என்ன நிலையில் இருக்கிறது
பதில்: இது மிகப் பெரிய வழக்கு. லக்னோ பெஞ்ச் மொத்தம் 8 ஆயிரம் பக்க அளவுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் 42 ஆயிரம் ஆவணங்கள் இருக்கின்றன. இவற்றில் சில ஆவணங்களை மொழிபெயர்த்து வழங்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. அதற்கு உரிய காலம் எடுக்கும். அனைத்து வாதிகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேள்வி: பாபர் மசூதி இடிப்பு நாளான நாளை என்ன செய்ய உள்ளீர்கள்?
பதில்: ஜனாதிபதியிடன் மனு கொடுப்பது மட்டும்தான் செய்ய உள்ளோம். இந்த நாட்டில் மத ரீதியாக பிளவை ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் போராட்டத்தையும் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.