வீரப்ப மொய்லி, ஷீலா தீட்சித், முகேஷ் அம்பானி மீதான வழக்குகள் தொடரும்: மணிஷ் சிசோடியா
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் ஆளுநர் ஷீலா தீட்சித் மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோர் மீது முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை தூசு தட்டுவோம் என்று டெல்லி துணை முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மணிஷ் சிசோடியா கூறியதாவது:
கடந்த ஆம் ஆத்மி ஆட்சியின்போது வீரப்ப மொய்லி, ஷீலா தீட்சித், முகேஷ் அம்பானி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக 2010-ம் ஆண்டு தெரு விளக்குகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக ஷீலா தீட்சித் மீது வழக்கு போடப்பட்டது.
கிருஷ்ணா-கோதாவரி இயற்கை எரிவாயுக்கான விலையை தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, வீரப்பமொய்லி இணைந்து உயர்த்தி விட்டனர் என்று குற்றம் சாட்டிய அப்போதைய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி உத்தரவிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அப்போது அவருக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுக்க முதல்வர் பதவியையே அவர் ராஜினாமா செய்யவும் நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.