முடிவுக்கு வந்தது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பிரச்சனை: வழக்குகளை பிரித்து தர தலைமை நீதிபதி ஒப்புதல்!
சுழற்சி முறையில் வழக்குகள் பிரித்து ஒதுக்கப்படும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லி: சுழற்சி முறையில் வழக்குகள் பிரித்து ஒதுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாக கடந்த மாதம் 12 ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்று அவர்கள் குற்றம்சாட்டினர். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது என்றும் அவர்கள் கூறினர்.
நீதிபதிகள் குற்றச்சாட்டு
இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்றும் தெரிவித்தனர். மேலும் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடு சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
வழக்குகளை வழங்குவதில்லை
மற்ற நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி வழக்குகளை பிரித்துக் கொடுப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். தலைமை நீதிபதி குறித்து மற்ற நீதிபதிகள் குற்றம்சாட்டியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீபக் மிஸ்ராவுக்கு கடிதம்
நீதிபதிகளின் பிரச்சனையில் விலகியே நிற்கபோவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓய்வுபெற்ற 4 நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடந்த 14ஆம் தேதி கடிதம் எழுதினர்.
தலைமை நீதிபதி ஒப்புதல்
இந்நிலையில் வழக்குகள் சுழற்சி முறையில் பிரித்து ஒதுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதன்மூலம் நீதிபதிகள் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.