நாட்டில் பொருளாதார அவசர நிலை பிரகடனம்? திகில் கிளப்பும் மமதா பானர்ஜி
Recommended Video
கொல்கத்தா: நாட்டில் பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பணம் கிடைக்காமல் அல்லாடி வருகிறார்கள்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, திடீரென அதிக அளவில் பணத்தேவை கூடிவிட்டதுதான், பணத் தட்டுப்பாடுக்கு காரணம் எனவும், இந்த நிலை சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
Seeing reports of ATMs running out of cash in several States. Big notes missing. Reminder of #DeMonetisation days. Is there a Financial Emergency going on in the country? #CashCrunch #CashlessATMs
— Mamata Banerjee (@MamataOfficial) April 17, 2018
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டுவிட்டரில் கூறுகையில், பல மாநிலங்களிலும் ஏடிஎம்களில் பணம் இல்லை. பெரிய பண மதிப்பு கொண்ட நோட்டுகள் மிஸ்சாகியுள்ளன. பண மதிப்பிழப்பு காலத்தை இது நினைவு கூறுகிறது. நாட்டில், பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா? இவ்வாறு மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
பண மதிப்பிழப்பை பிரதமர் மோடி டிவியில் தோன்றி அறிவித்த உடனேயே, இது நாட்டை கெடுத்துவிடும் என முதலில் எச்சரித்த அரசியல் தலைவர் மமதா பானர்ஜிதான். ஆனால் வேறு பல தலைவர்கள் முதலில் அந்த நடவடிக்கையை வரவேற்றனர். பிறகுதான் அது முறையாக திட்டமிடப்படாதது என்பதை உணர்ந்து விமர்சனம் செய்தனர்.
இப்போது ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழலில், மமதா பானர்ஜி, நாட்டில் பொருளாதார எமெர்ஜென்சியை கொண்டுவர முயற்சி நடக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.