"அவங்க" சமைச்சது வேணாம்.. சாப்பிட மாட்டோம்" அடம்பிடித்த 5 பிராமணர்.. கொரோனாவிலும் கொடுமை!
தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தலித் சமையலை சாப்பிட மறுத்துள்ளனர் 5 பிராமணர்கள்
ராஞ்சி: "அந்த எஸ்சி சமைச்சது எங்களுக்கு வேணாம்.. சாப்பிட மாட்டோம்" என்று 5 பிராமணர்கள் பிடிவாதம் பிடித்த சம்பவம் பகீரை கிளப்பி உள்ளது.
கொரோனா தாண்டவத்திலும் சாதி வெறி அதைவிட வெறிபிடித்து ஆடுவதை பார்க்க வருத்தமாக உள்ளது.. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஹசாரிபாக்கின் பிஷ்னுகார் என்ற தொகுதியில் ஒரு அரசு பள்ளியில் சிலரை தொற்று காரணமாக தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.. அவர்களுக்கு தேவையான சிகிச்சையும் நடந்து வந்தது.
கொரோனா பயம்.. ஏசி இல்லை.. காணாமல் போன நவீனங்கள்.. பழைய காலத்துக்கு மாறிய அலுவலங்கள்
நோயாளிகள்
ஏராளமான மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அங்கு சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், 5 பிராமணர்கள் தங்களுக்கு தரும் சாப்பாட்டை சாப்பிட மறுத்துள்ளனர்.. இதற்கு காரணம், அதை சமைத்தது எஸ்சி இனத்தை சேர்ந்த ஒரு சமையல்காரர் என்கிறார்கள்..
கிராம தலைவர்
தனிமைப்படுத்தல் மையத்தில் நடந்த இந்த சம்பவம் உள்ளூர் கிராம தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, அந்த 5 பேருக்கும், மாவட்ட அதிகாரிகளால் ரேஷன் கிட்-கள் வழங்கப்பட்டன... மேலும் அந்த 5 பேருக்காக மட்டும், தனியாக சமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
5 பிராமணர்கள்
இந்த தகவலை ஹராசிபாக் துணை ஆணையர் புவனேஷ் பிரதாப் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்... ஆனால் இதை பற்றி அவர் சொல்லும்போது, இந்த 5 பிராமணர்களும் இப்படி ஒரு பிரச்சினையை எழுப்பியிருக்கக் கூடாது என்று வேதனை தெரிவித்தார்.. வைரஸ் பரவல் அதிகரித்து வரும்நிலையில், மத, சாதி உறவுகளுக்கு அவர்கள் மதிப்பளித்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமையல்
தங்களுக்கு சமைப்பதற்காகவே தனியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவர்கள் கேட்டு கொண்டதையடுத்து, அவர்கள் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் தங்கியிருந்த இந்த பார்வார் இட்கா பள்ளியில் புலம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கொரோனா நோய் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப் பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
தீண்டாமை
சாதி பாகுபாட்டால் நிறைய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.. தலித் சமைத்துவிட்ட காரணத்தினாலேயே பலர் சாப்பிட மறுத்து வருகிறார்கள்.. தலித் குடிக்க தண்ணீர் தந்தாலும் அதனையும் குடிக்க மறுக்கும் அவலமும் நடக்கிறது.. கொரானா வந்தாலும் சரி, கொத்து கொத்தாக செத்தாலும் சரி, இந்த தீண்டாமை என்றுதான் ஒழிந்து தொலைந்து போகுமோ தெரியவில்லை!