பெற்றோர் காதல் திருமணம்.. குழந்தைகளுக்கு ‘ஜாதி இல்லை’ பேர்... கேரளாவில் வாழும் சூப்பர் குடும்பம்
கேரளாவில் வாழும் குடும்பம் ஒன்றில் அனைத்து குழந்தைகளுக்கும் ஜாதியில்லை என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கொல்லம்: கேரளாவில் இரண்டு தலைமுறைகளாக தங்கள் பேரிலேயே ஜாதி இல்லை என்பதைச் சேர்த்துக் கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வருகிறது ஒரு குடும்பம்.
ஜாதி, மத பாகுபாடற்றா சமூகத்தை உருவாக்க வேண்டும். அப்போது தான் சமூகத்தில் ஏற்றத்தாழ்வற்ற நிலை உருவாகும் என பலர் மேடைகளில் ஆவேசமாக முழங்கிக் கொண்டிருக்க, சத்தமித்தாமல் அதனை செயல்படுத்தி வருகின்றனர் கேரளாவைச் சேர்ந்த 'ஜாதி இல்லை’ குடும்பத்தினர்.
கேரளா மாநிலம் கொல்லம் அருகே புனலூர் நகராட்சி பகுதியில் வாழ்ந்து வருகிறது இந்தக் குடும்பம். இவர்கள் கடந்த இரண்டு தலைமுறையாக தங்களது குடும்பப் பெயராக ஜாதி இல்லை என்பதை சேர்த்தே தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்து வருகின்றனர்.
இவர்களது இந்த புரட்சிகரமான முடிவிற்குப் பின்னால், சினிமாவில் வருவது போல் அழகான காதல் கதை ஒன்று உள்ளது. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர், இவர்கள் குடும்பத்தில் இருமதத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான ஃபசுலுதின் அலிகுஞ்சுவும், கிறிஸ்தவரான ஆக்னஸ் கேப்ரியலும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால், இதற்கு இருவீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது பெற்றோர் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் மனுத்தாக்கல் செய்து தனது மனைவியை மீட்டுள்ளார் வக்கீலான அவரது காதல் கணவர் ஃபசுலுதின். ஆனாலும் அவர்களது திருமணத்தை பதிவு செய்வதில் சுமார் 19 ஆண்டுகள் சிக்கல் நீடித்துள்ளது. 1992ம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்தின் மூலமாக இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
தங்களது கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட சட்ட சிக்கல்களைக் கண்டு, புரட்சிகரமாக முடிவை எடுத்துள்ளார் ஃபசுலுதின். தனது பிள்ளைகளுக்கு இன்ன ஜாதி என்பதைக் குறிப்பிடாமல் வளர்க்க வேண்டும் என முடிவு செய்த அவர், அவர்களின் பெயரிலேயே கேஸ்ட்லெஸ், அதாவது ஜாதி இல்லை என்பதைச் சேர்த்து விட்டார்.
இத்தம்பதியின் மூத்தமகனின் பெயர் கேஸ்ட்லெஸ், இரண்டாவது மகனின் பெயர் கேஸ்ட்லெஸ் ஜூனியர், மகளின் பெயர் ஷைன் கேஸ்ட்லெஸ் ஆகும். தற்போது இவர்கள் மூவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்கள் இரண்டாம் தலைமுறையாக தங்களது பிள்ளைகளுக்கும் கேஸ்ட்லெஸ் என்றே துணைப்பெயராக வைத்துள்ளனர்.
இவர்களது பள்ளி சான்றிதழில் கூட ஜாதி இல்லை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களது உறவினர்கள், 'உங்களது மறைவிற்குப் பின் எந்த முறைப்படி உங்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது, உங்களை எரிப்பதா அல்லது புதைப்பதா?’ எனக் கேள்வி எழுப்புகிறார்களாம். அதற்கும் இந்தக் குடும்பத்தினரின் தெளிவான பதில் வைத்துள்ளனர். இந்தக் குடும்பத்தில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்தோர் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனராம். எனவே, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் என்பதே உறவினர்களுக்கு ஜாதியில்லை குடும்பத்தாரின் பதிலாக உள்ளது.