நடு இரவில் காதலியுடன் ரொமான்ஸ்... மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் பாகிஸ்தானுக்கு ஓட்டம்
ஜெய்ப்பூர்: காதலியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றபோது பெற்றோரிடம் மாட்டிக்கொண்டதால், அவமானத்தில் ராஜஸ்தான் இளைஞர் பாகிஸ்தானுக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தின் சஜ்ஜன் கா பார் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஜெமாரா ராம் மேக்வால். இவர் கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் திடீரென்று காணாமல் போய்விட்டார். அவரை அக்கம்பக்கத்தில் தேடிய அவரது குடும்ப உறுப்பினர்கள், பின்னர் நவம்பர் 16ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வசிப்பதாலும் பாகிஸ்தானின் பப்னி கிராமத்தில் சில உறவினர்கள் இருப்பதாலும் அந்த இளைஞர் பாகிஸ்தானிற்குச் சென்றிருக்கலாம் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. மேலும், எல்லை தாண்டிய ஒரு நபரைப் பாகிஸ்தான் காவல் துறை கைது செய்ததைப் பார்த்தாக பப்னி கிராமத்தில் இருக்கும் உறவினர்கள் தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்துக் காவல் துறையினரின் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைக் கடந்தாண்டு நவம்பர் 4ஆம் தேதி கடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிரவு, ஜெமாரா ராம் தனது வீட்டின் அருகே வசிக்கும் காதலியைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணின் பெற்றோரிடம் ஜெமாரா ராம் வசமாக மாட்டிக்கொண்டார்.
இது குறித்து ஊர் மக்களிடம் புகார் அளிக்கவுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் ஜெமாரா ராமை மிரட்டியுள்ளனர். இதனால் அவமானத்தில் அந்த இளைஞர் சர்வதேச எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றுள்ளார். அவரை பாகிஸ்தான் காவல் துறை நவம்பர் 5ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் காவல் துறைக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். எல்லை தாண்டியதற்காக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள பாகிஸ்தான், அந்நாட்டுச் சட்டத்தின்படியே இளைஞரை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பதிலளித்தாக எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.