காவிரி வழக்கு... வாத, விவாதங்கள் தொடர்கின்றன.. விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு #cauvery
டெல்லி: வாத, விவாதங்கள் தொடர்வதால் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை நாளை ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகம் மற்றும் கர்நாடகா என இரண்டு மாநிலங்களிலும் காவிரி படுகையில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து, தண்ணீர் தேவை ஆகியவை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்க 4-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 5-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த முடிவு 18-ந் தேதி (இன்று) வரை நிறுத்திவைக்கப்படுகிறது என்றும், இடைக்கால ஏற்பாடாக தமிழகத்துக்கு 7-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் அணைகளில் இருந்து திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரு மாநில நீர் இருப்பு மற்றும் தேவை குறித்து ஆராய, தேசிய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தனர்.
கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் கர்நாடகம், தமிழக மாநிலங்களில் உள்ள காவிரி படுகை பகுதிகளில் இந்தக் குழு ஆய்வு செய்தது. அதன் தொடர்ச்சியாக தயார் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கையை நேற்று உச்சநீதிமன்றத்தில் இந்தக் குழு தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், "தேவையான தண்ணீர் கிடைக்காததால் இரு மாநிலங்களிலும் விவசாய, மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், "கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக நலனை கர்நாடகாவும், கர்நாடகாவின் நலனை தமிழகம் மற்றும் புதுச்சேரியும் மதிக்க வேண்டும். இது தொடர்பாக அந்தந்த மாநில மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நீர்வரத்து, வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சரியான முறையில் பாசன வழிமுறைகளை மேற்கொள்வதால் 50 சதவீத தண்ணீர் தட்டுப்பாட்டை சரிசெய்யலாம். தற்போது நடைமுறையில் உள்ள நீர் பாசன முறை பழமையானதாக இருப்பதால் தண்ணீர் அதிக அளவில் செலவாகிறது. எனவே குறைந்த அளவு தண்ணீரில் அதிக அளவு பயன்பெறும் வகையில் நவீன வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். நேரடியாக நிலத்துக்கு தண்ணீரை திறந்து விடுவதை விட குழாய் மூலம் பாசனத்துக்கு திறந்து விடுவது சிறந்தது" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு, நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் தாக்கல் செய்த மனு, தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சார்பில் விளக்கம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாத, விவாதங்கள் தொடர்வதால் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.