காவிரி கலவரத்தால் கையை சுட்டுக் கொண்ட கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் விளையும் காய்கறிகளை தமிழகத்திற்கு லாரிகள் வாயிலாக கொண்டு செல்ல முடியாததால் அம்மாநில விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
காவிரிக்காக நடைபெற்ற கலவரங்கள், தொடரும் பதற்றமான சூழ்நிலை என்பது, பல துறைகளையும் பாதித்து வருகிறது. தமிழக லாரி டிரைவர்களை குறி வைத்து கன்னட அமைப்பினர் தாக்கி வீடியோக்களை வெளியிட்டதால், பெரும் கொந்தளிப்பு சூழல் உள்ளது.
நிலைமை சீராகும் வகை கர்நாடகாவுக்கு லாரிகளை இயக்கப்போவதில்லை என தமிழக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவிலிருந்தும் தமிழகத்திற்கு லாரிகள் இயங்கவில்லை.
விலை வீழ்ச்சி
இதனால் கர்நாடகாவில் பெருமளவில் தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், குடைமிளகாய் போன்றவற்றை பயிரிட்ட விவசாயிகள் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளனற். ஒரு வாரத்திலேயே 50 சதவீத விலை வீழ்ச்சியை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
குடைமிளகாய், வெங்காயம்
கடந்த வாரம் கிலோ ரூ.28-க்கு விற்பனையான குடை மிளகாய், தற்போது, ரூ.12-க்கு விற்பனையாகிறது. வெங்காயத்தின் மொத்த மார்க்கெட் விலை ரூ.20லிருந்து ரூ.8-ஆக குறைந்துள்ளது.
தக்காளி விலை
தக்காளி விலை ஏற்கனவே வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் இப்போது நிலைமை இன்னும் மோசம். ஒரு பாக்ஸ் தக்காளியை ரூ.300க்கு விற்றுவந்த விவசாயிகள் தற்போது ரூ.100-150 விலையில் கொடுக்கிறார்கள்.
விலை ஏற்றம்
கேரட், பீன்ஸ், வாழைப்பழம் போன்றவை தமிழகத்தில் இருந்து கர்நாடகா வருபவை என்பதால், அவற்றின் விலை சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மணி மிளகு, காளான், கேரட் போன்றவை ஊட்டியிலிருந்து கர்நாடகா செல்பவை. அவற்றின் வரத்து நின்றுபோயுள்ளது.
பல கோடி நஷ்டம்
தமிழகம்-கர்நாடகா இடையே நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் லாரிகள் இயங்கிவந்தன. தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளதால் தினமும் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.