'கருப்பு' 1991-ம் ஆண்டை நினைவுபடுத்தும் பெங்களூரு ஊரடங்கு உத்தரவு.. முடங்கிய இயல்பு வாழ்க்கை
பெங்களூரு: 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவு... இதர இடங்களில் 144 தடை உத்தரவு... சாலைகளில் சில வாகனங்கள் மட்டுமே... எல்லோரு முகத்திலும் அச்சம்...
இன்றைய பெங்களூருவின் காலை நிலைமை இதுதான்... இதே போல்தான் காவிரி பிரச்சனை மிக மோசமான யுத்தமாக உருவெடுத்த வரலாற்றின் கருப்பு பக்கமான 1991-ம் ஆண்டும் இருந்தது...
1991-ம் ஆண்டை போல...
தற்போதைய ஊரடங்கு உத்தரவு அந்த 1991-ம் ஆண்டைத்தான் நினைவூட்டுகிறது.. இந்த ஊரடங்கு உத்தரவுக்கு நடுவே பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படுகிறது..
வெறிச்சோடிய வீதிகள்
அதிகாலையிலேயே பலரும் சில நாட்களுக்குத் தேவைகளுக்கான பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றதை பார்க்க முடிகிறது.. சாலைகளில் சில வாகனங்களே இயக்கப்படுகின்றன..
பேருந்துகள் நிறுத்தம்
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள பகுதிகளில் அரசுப் பேருந்துகள் இயக்கம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கான எந்த பேருந்தும் இயகப்படவில்லை.
கண்டதும் சுடும் உத்தரவு
வன்முறையாளர்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையில் இந்த ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது கண்டதும் சுட உத்தரவிடும் நடைமுறை பின்பற்றுவதில்லை. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறி நிலைமை மோசமாகும் போது அரசு, கண்டதும் சுடுவதற்கான உத்தரவை பிறப்பிக்கும்.
ஆகையால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் பகுதிகளில் வசிப்போர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்....
அவசர உதவிக்கான வாட்ஸ் அப் எண்
இதனிடையே பெங்களூரு போலீசார் அவசர உதவிக்கான வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட்டுள்ளனர். 9480801000 என்ற எண்ணில் போலீசாரின் உதவியை நாடலாம்.