கர்நாடகாவில் தமிழ் படங்கள் வெளியிட தடை! பெங்களூருவில் 'கிடாரி' பேனர்கள் கிழிப்பு!! #cauvery
பெங்களூரு: கர்நாட்காவில் தமிழ்த் திரைப்படங்களை வெளியிட கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூரு திரையரங்கில் கிடாரி பேனர்கள் கிழிக்கப்பட்டதால் படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் தமிழ் திரைப்படங்களை தற்போது வெளியிடுவதை திரையரங்கு உரிமையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுதான் தாமதம்... கன்னட அமைப்பினரும் விவசாயிகளும் போராட்டத்தில் குதித்தனர்.
|
தமிழ் படங்களுக்கு எதிர்ப்பு
இன்று 2-வது நாளாக கர்நாடகாவின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்த் திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிடாரி பேனர் கிழிப்பு
பெங்களூருவில் பெங்களூரு டிஜிஹள்ளி பகுதியில் உள்ள விநாயகா தியேட்டரில் சசிகுமாரின் கிடாரி படம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது கன்னட அமைப்பினர் தியேட்டருக்குள் நுழைந்து பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாதுகாப்பு
இதனைத் தொடர்ந்து கிடாரி திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தமிழ்த் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
|
படங்கள் நிறுத்தம்
இதனிடையே பல திரையரங்கு உரிமையாளர்கள் தமிழ்ப் படங்களை வெளியிடுவதை தாமாக முன்வந்து நிறுத்திவிட்டனர்.