பெங்களூரில் 144 தடை உத்தரவு: மாத்தி மாத்தி பேசும் போலீஸ், அமைச்சர்- மக்கள் குழப்பம்
பெங்களூர்: பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவே இல்லை என்கிறார்கள் போலீசார். ஆனால் தடை உத்தரவு அமலில் உள்ளது என்கிறார் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா. இதனால் மக்கள் பெரும்குழப்பத்தில் உள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு கன்னட அமைப்புகள் கடுமையாக கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று சென்னையில் கன்னடர் நடத்தும் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் தாக்கப்பட்டதை அடுத்து பெங்களூரில் போராட்டம் வெடித்துள்ளது. கன்னட அமைப்பினர் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்குவதும், எரிப்பதுமாக உள்ளனர்.
மேலும் தமிழர்கள் நடத்தும் பூர்விகா மொபைல் கடை மற்றும் அடையாறு ஆனந்த பவன் உணவகம் ஆகியவை தாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களை அடுத்து பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் அல்சூர், சிவாஜி நகர், ஓக்கலிபுரம், பிரகாஷ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரில் நிலைமை மோசமாவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் வாகனங்களில் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள். நகரில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெங்களூரில் 144 தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மாநகர போலீஸ் கமிஷனர் மேகரிக் தெரிவித்துள்ளார். ஆனால் பெங்களூரில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதனால் பெங்களூரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.